மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜத் படிதார் இதுவரை மூன்று போட்டிகளில் வாய்ப்பு பெற்று மூன்றிலும் சரியாக ரன் குவிக்கவில்லை.
கே எல் ராகுல் இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. இந்த நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. சர்ஃபராஸ் கான் தனது அறிமுகப் போட்டியான இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இரண்டு அரைசதங்கள் அடித்த போதும், நான்காவது போட்டியில் ரன் குவிக்காமல் ஏமாற்றினார்.

இதை அடுத்து மிடில் ஆர்டரில் ரஜத் படிதாரை நீக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஜத் படிதாரை நீக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக யாரை மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வைப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கே எல் ராகுலுக்கு பதிலாகத் தான் ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டார். ராகுலின் காயம் இன்னும் குணமாகாத நிலையில் அவர் அது குறித்து முழு விவரங்களை அரிய லண்டனில் உள்ள சிறப்பு மருத்துவரை சந்திக்க சென்று இருக்கிறார். அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன் அணிக்கு திரும்புவது சாத்தியமில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாற்று வீரராக இருக்கும் தேவ்தத் படிக்கலை அணியில் களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினாலும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் வெற்றியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற திட்டமிட வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில், தனது இரண்டாவது குழந்தையின் பிறப்பை ஒட்டி அணியில் இருந்து விலகிய விராட் கோலி, தற்போது குழந்தை பிறந்து மூன்று வாரம் ஆன நிலையில் இந்திய அணிக்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.