ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிக்ஸர் மழை பொழிந்து வரும் ஜெய்ஸ்வால், இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒரு சிக்ஸ் அடித்தார். அதன் மூலம் 16 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத வீரேந்தர் சேவாக்கின் டெஸ்ட் போட்டி சாதனையை உடைத்தார் ஜெய்ஸ்வால்.
அது மட்டுமின்றி கவாஸ்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் மட்டுமே செய்த டெஸ்ட் போட்டி சாதனை ஒன்றையும் செய்து மிரட்டி இருக்கிறார் ஜெய்ஸ்வால்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் குவித்த நிலையில், அடுத்து ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மட்டுமே ஓரளவு ரன் சேர்த்து அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் யாரும் அரைசதம் அடிக்கவில்லை. 96 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்த ஜெய்ஸ்வால் 9 ஃபோர் மற்றும் 1 சிக்ஸ் அடித்து இருந்தார். அது இந்த ஆண்டில் டெஸ்ட் தொடரில் அவரது 23வது சிக்ஸ் ஆகும்.
இதன் மூலம், ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் ஜெய்ஸ்வால். முன்னதாக 2008ஆம் ஆண்டு வீரேந்தர் சேவாக் 22 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். 2022இல் ரிஷப் பண்ட் 21 சிக்ஸர்கள் வரை அடித்து அந்த சாதனையை நெருங்கினாலும் அவரால் அதை முறியடிக்க முடியவில்லை.
அதே போல தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 618 ரன்கள் குவித்து இருக்கிறார் ஜெய்ஸ்வால். அதன் மூலம், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் 600 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் மட்டுமே அதை செய்து இருந்தனர்.
அதே போல ஒரே டெஸ்ட் தொடரில் 600 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய துவக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக துவக்க வீரர் சுனில் கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1970களில் இரண்டு முறை 700 ரன்களை கடந்து ரன் குவித்து இருந்தார். அவரைத் தவிர வேறு எந்த இந்திய வீரரும் டெஸ்ட் தொடர்களில் 700 ரன்களை தொட்டதில்லை. கவாஸ்கர் அதிகபட்சமாக 774 ரன்கள் அடித்து இருக்கும் நிலையில், அந்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.