ராஞ்சி : இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் அதிக ரன் குவித்து இருக்கிறார் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். அவர் இன்னும் 148 ரன்கள் குவித்தால் விராட் கோலியின் 9 ஆண்டு பிரம்மாண்ட டெஸ்ட் சாதனையை முறியடிப்பார் என்பதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ஜெய்ஸ்வால் இந்திய அணியின் துவக்க வீரராக சிறப்பாக ஆடி வருகிறார். இங்கிலாந்து தொடரில் மட்டும் அவர் இரண்டு இரட்டை சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்து இருக்கிறார். 6 இன்னிங்ஸ்களில் 545 ரன்கள் குவித்து இருக்கிறார். இதன் பேட்டிங் சராசரி 109 ஆகும். இந்த டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகள் முடிவில் இரண்டு அணிகளிலும் சேர்த்து அதிக ரன் குவித்த வீரராக இருக்கிறார் ஜெய்ஸ்வால்.

ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் புதிய சாதனையை படைக்க இருக்கிறார். இதுவரை ஒரே டெஸ்ட் தொடரில் 600 ரன்களுக்கும் மேல் குவித்த இந்திய வீரர்கள் நால்வர் மட்டுமே. சுனில் கவாஸ்கர் இரண்டு முறையும் (774 ரன்கள் மற்றும் 732 ரன்கள்), விராட் கோலி மூன்று முறையும் (692 ரன்கள், 655 ரன்கள் மற்றும் 610 ரன்கள்), திலிப் சர்தேசாய் ஒரு முறையும் (642 ரன்கள்), ராகுல் டிராவிட் இரண்டு முறையும் (619 ரன்கள் மற்றும் 602 ரன்கள்) 600 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கின்றனர்.
இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைய இருக்கிறார். அது மட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி மட்டுமே வைத்துள்ளார். அவர் 655 ரன்கள் குவித்து இருக்கிறார். அந்த சாதனையை நான்காவது டெஸ்ட் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், ஒரே டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் அதிகபட்ச ரன்களான 692 ரன்கள் சாதனையையும் ஜெய்ஸ்வால் இந்த தொடரின் முடிவில் முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
அடுத்து இந்திய வீரர்களில் ஒரே டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கும் மேல் குவித்த ஒரே வீரர் சுனில் கவாஸ்கர் மட்டுமே. அவர் 1971 மற்றும் 1979 காலகட்டங்களில் அந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். அந்த அரிய சாதனையையும் இளம் வயதிலேயே முறியடிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார் ஜெய்ஸ்வால்.