விசாகப்பட்டினம் : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த பின் ரசிகர்கள் அமர்ந்து இருந்த பகுதியை பார்த்து முத்தம் கொடுத்தார். அது குறித்து சமூக வலைதளங்களில் சிலர் அவரது காதலிக்கு முத்தம் கொடுத்தார் என தேவையற்ற சர்ச்சையை கிளப்பினர். தற்போது அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார் ஜெய்ஸ்வால்.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மட்டுமே பொறுப்பாக நின்று ரன் குவித்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட 35 ரன்களை தாண்டவில்லை. ஆனால், ஜெய்ஸ்வால் ஒன்றரை நாட்கள் பேட்டிங் செய்து 209 ரன்கள் குவித்தார்.

தன் முதல் சர்வதேச டெஸ்ட் இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில் இருந்த ஜெய்ஸ்வால் பேட்டை தூக்கி காட்டிய பின் ஹெல்மட்டை கழற்றி வைத்து விட்டு, இரண்டு கைகளாலும் முத்தம் கொடுப்பது போல சைகை செய்தார். ஜெய்ஸ்வால், இங்கிலாந்தை சேர்ந்த மேடி ஹாமில்டன் என்பவரை காதலிப்பதாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில், அவருக்கு தான் ஜெய்ஸ்வால் முத்தம் கொடுத்தார் என சில ரசிகர்கள் சமூக ஊடகங்களில் எழுதி வந்தனர்.
தற்போது பிசிசிஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "எனது அன்பிற்கு உரியவர்களுக்கு அந்த முத்தம்" என அந்த முத்தம் குறித்து விளக்கம் கூறி இருக்கிறார் ஜெய்ஸ்வால். மேடி ஹாமில்டன் தற்போது நடந்து வரும் இங்கிலாந்து தொடரை காண நேரில் வந்து இருக்கிறார். இந்த நிலையில், ஜெய்ஸ்வால் அவருக்கு தான் கொடுத்தேன் என்பதை சூசகமாக கூறி இருக்கிறார்.
இந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் அடித்த இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து இந்தியா இரண்டாம் இன்னிங்ஸில் 255 ரன்கள் குவித்து, இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது. இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.