ஹைதராபாத் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. அதிலும், இங்கிலாந்து அணி தனது பேஸ்பால் ("bazball") எனும் அதிரடி ஆட்டம் ஆடி இந்தியாவை திணற வைக்கப் போகிறது என பலரும் கூறி வந்த நிலையில், இந்திய அணியின் ஜெய்ஸ்வால் தனது அதிரடி பேட்டிங்கால் பதிலடி கொடுத்தார். அவர் ரன் குவித்த வேகத்தை பார்த்து இங்கிலாந்து அணி மிரண்டு போனது.
இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் ஆடிய அதிரடி ஆட்டத்தை பலரும் இங்கிலாந்து அணியின் பேஸ்பால் போலவே "ஜெய்ஸ்பால்" என கூறி வருகின்றனர். அவர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 70 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இருந்தார். அதன் மூலம், இந்திய அணி பேட்டிங்கில் பெரும் ஆதிக்கம் செலுத்தியது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அது அந்த அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்பட்டது. அதே போல முதல் எட்டு ஓவர்களில் பும்ரா மற்றும் சிராஜ் பந்துவீச்சை துவம்சம் செய்தது இங்கிலாந்து துவக்க ஜோடி. முதல் 8 ஓவர்களில் இங்கிலாந்து அணி 41 ரன்கள் குவித்தது.
அடுத்து இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் அதிரடி துவக்கம் அளித்தனர் பின்னர் ரோஹித் சர்மா 27 பந்துகளில் 24 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 70 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இருந்தார். இந்தியா 23 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.
ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால் பதற்றத்தில் இருந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 15 ஓவர்களுக்குள் மூன்று ரிவ்யூக்களையும் வீணாக்கினார். இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் தொடர்ந்து ஆட உள்ளனர். இந்திய அணியின் கைவசம் 9 விக்கெட்கள் இருப்பதால் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. குறிப்பாக ஜெய்ஸ்வால் இரண்டாம் நாளும் தன் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தால் இங்கிலாந்து நிலை பரிதாபமாக மாறிவிடும்.