ராஜ்கோட் : ரோஹித் சர்மா, சுப்மன் கில், பும்ரா ஆகியோரை விடுத்து வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பார்த்து தூக்கத்தை இழந்து இருக்கிறது இங்கிலாந்து அணி.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ளன. இதில் ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் அரைசதமும், இரண்டாவது போட்டியில் இரட்டை சதமும் அடித்தார். முதல் டெஸ்ட்டில் தோற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.

முன்பு துவக்க வீரர் வீரேந்தர் சேவாக் டெஸ்ட் போட்டிகளில் எப்படி தனி ஆளாக அதிரடி ஆட்டம் ஆடி சில போட்டிகளில் எதிரணிக்கு வாய்ப்பே கொடுக்காமல் செய்வாரோ, அதே போன்ற மனநிலையில் தான் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். எனவே, தற்போது பேஸ்பால் (Bazball) எனும் அதிரடி பாணி கிரிக்கெட் ஆடி வரும் இங்கிலாந்து அணிக்கு ஜெய்ஸ்வால் மட்டுமே ஒரே தடையாக இருக்கிறார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த உடன் இங்கிலாந்து வீரர்கள் ஓய்வு எடுக்க துபாய் சென்றனர். அங்கே இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்குல்லம் ஜெய்ஸ்வால் விக்கெட்டை விரைவாக வீழ்த்துவது எப்படி? என தனியாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து முன்னாள் வீரர்களும் அது பற்றி யோசனைகளை கூறி வருகின்றனர்.
வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் ஜெய்ஸ்வால், மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்ய வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசையாக உள்ளது. மூன்றாவது டெஸ்ட் நடைபெற உள்ள ராஜ்கோட் மைதானத்தில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான தட்டையான ஆடுகளம் தயாரிக்கப்பட்டு இருப்பதால் ஜெய்ஸ்வால் சதம் அடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.