இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் ராகுல், பண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்குர், கலீல் அஹ்மது அணியில் ஆடினர். கலீல் அஹ்மது நேற்று தன் அறிமுகப் போட்டியில் ஆடினார். இந்திய அணி நேற்று முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரரான கேப்டன் ரோஹித் சர்மா 23 ரன்களில் வெளியேறினார். அடுத்து தவான், ராயுடு கூட்டணி அமைத்து சிறப்பாக பேட்டிங் செய்தனர். அரைசதம் அடித்து 60 ரன்கள் எடுத்த நிலையில் அம்பத்தி ராயுடு ஆட்டமிழந்தார்.
சதம் அடித்த தவான்
அடுத்து தினேஷ் கார்த்திக், தவான் சேர்ந்து நன்றாக ஆடினர். தவான் சதம் அடித்து இங்கிலாந்து தொடரின் மோசமான ஆட்டத்துக்கு முடிவுரை எழுதினார். 41வது ஓவரில் தவான் 120 பந்துகளில் 127 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் சென்ற பின் இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
ஜாதவ் போராட்டம்
அடுத்து வந்த தோனி அதிர்ச்சி அளிக்கும் வகையில் 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து தினேஷ் கார்த்திக்கும் வெளியேற, கேதார் ஜாதவ் மட்டுமே பேட்ஸ்மேன்கள் பட்டியலில் மீதமிருந்தார். அவர் புவனேஸ்வர் குமாரை ஒருபுறம் வைத்துக் கொண்டு ரன் அடிக்க போராடினார். இறுதியில் இந்தியா 285 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து தன் இன்னிங்க்சை முடித்துக் கொண்டது. 40 ஓவர்கள் இருக்கும் போது, இந்தியா எளிதாக 300 ரன்களை கடந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு மாறாக கடைசி 10 ஓவர்களில் இந்தியா தட்டுத் தடுமாறி தான் ரன் எடுத்தது.
அபாரமாக ஆடிய ஹாங்காங்
ஹாங்காங் அணியின் துவக்க வீரர்கள் நிசாகத் கான் மற்றும் அன்ஷுமன் ராத் இணைந்து ஹாங்காங் அணிக்கு சாதனை துவக்கம் அளித்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 208 பந்துகள் சந்தித்து 174 ரன்கள் குவித்து அசத்தினர். இந்தியாவால் 34 ஓவர்கள் வரை இவர்களை பிரிக்க முடியாதது வேதனையான விஷயம். நிசாகத் கான் 92, அன்ஷுமன் ராத் 73 ரன்கள் எடுத்தனர். இவர்கள் 35 மற்றும் 36வது ஓவர்களில் அடுத்தடுத்து வெளியேறினர்.
இந்தியா தடுமாற்றம்
இவர்களைப் பிரிக்கவே தடுமாறிய இந்திய பந்துவீச்சாளர்கள், அடுத்தும் தடுமாறினர். விக்கெட்கள் அவ்வப்போது கிடைத்தாலும், ஹாங்காங் அணி வீரர்கள் ரன் அடிக்கும் வேகத்தை குறைக்கவில்லை. எங்கே, வெற்றி பெற்று விடுவார்களோ என்ற பதட்டத்தோடு தான் 44வது ஓவர் வரை இருந்தது. 45வது ஓவரில், சாஹல் இரண்டு விக்கெட்கள் வீழ்த்த ஓரளவு ஹாங்காங் அணியின் ரன் வேகம் நின்றது.
இந்தியா பரிதாப வெற்றி
இறுதியில் ஹாங்காங் 259 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் இழந்து 50 ஓவர்களை முடித்தது. இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப வெற்றியை பெற்றது. நேற்று இந்தியாவுக்கு ஆறுதல் அளித்தது புதிய வீரர் கலீல் அஹ்மது 3 விக்கெட்கள் எடுத்தது, அம்பத்தி ராயுடு 60 மற்றும் தவான் 127 ரன்கள் சேர்த்தது மட்டுமே. ஹாங்காங் அணி அனுபவமின்மையால் தான் நேற்று தோற்றது. திறமை குறைவால் அல்ல. ஆனால், இந்திய அணி அத்தனை அனுபவம் வாய்ந்த அணி, நேற்று தடுமாறிய விதத்தை பார்த்தால், பரிதாபமாக உள்ளது. இன்று பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக இந்தியா என்ன செய்யப் போகிறதோ?