எனக்கா டீமில் இடமில்லை.. வெளுத்து வாங்கிய சர்ஃபராஸ் கான்.. பயிற்சி போட்டியில் சதம் அடித்து அசத்தல்
லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பயிற்சிப் போட்டியில் சர்ஃபராஸ் கான் சிறப்பாக ஆடி சதம் அடித்து இருக்கிறார். அவருக்கு இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அவர் இந்திய அணிக்கு எதிராக ஆடி சதம் அடித்து இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணிக்கும், இந்தியா ஏ அணிக்கும் இடையே நடக்கும் பயிற்சிப் போட்டியின் இரண்டாவது நாள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. மூடிய மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியின் ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் குறித்த முழு விவரங்கள் வெளிவராத நிலையில், சில முக்கிய நிகழ்வுகள் இப்போது தெரியவந்துள்ளன.

இந்தப் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணிக்காகக் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதிலும் 76 பந்துகளில் அவர் சதம் அடித்தார். அப்போது தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் அங்கு இருந்தார். சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை என்பதும், இந்தியா ஏ அணியில் மட்டுமே இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியிலும் 92 ரன்கள் குவித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்தியா ஏ அணிக்காக சாய் சுதர்சன் பேட்டிங் செய்துள்ளார், ஆனால் அவர் எடுத்த ரன்கள் குறித்த விவரம் வெளியாகவில்லை. இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இவர்களே துவக்க வீரர்களாகச் செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முக்கிய பந்துவீச்சாளரான பும்ரா ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பதும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. எனினும், அவர் அதிக ஓவர்களை வீசவில்லை. முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
முன்னதாக முதல் நாள் ஆட்டத்தில் கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அரை சதம் அடித்திருந்தனர். ஷர்துல் தாகூர் முதல் நாள் ஆட்டத்தில் சில விக்கெட்டுகளை வீழ்த்தியதாக பிசிசிஐ தனது பதிவில் தெரிவித்திருந்தது.
இந்த விவரங்கள் மட்டுமே இதுவரை வெளியாகியுள்ளன. இந்திய அணி மற்றும் இந்தியா ஏ அணி எடுத்த மொத்த ஸ்கோர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இங்கிலாந்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயிற்சிப் போட்டியின் போது வீரர்களின் செயல்பாட்டைக் கவனிக்க கம்பீர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரது தாயாரின் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், கௌதம் கம்பீர் உடனடியாக நாடு திரும்பியுள்ளார். அவர் இல்லாத நிலையில்தான் இந்திய அணி இந்தப் பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறது.


Click it and Unblock the Notifications