டி20 உலக சாம்பியனுக்கு சோகம்.. அயர்லாந்துக்கு எதிராக முதல் முறை இந்திய அணி தோல்வி
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 183 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, அயர்லாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லோர்கன் டக்கர் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கரேத் டெலானி, ஒரு ரன்னில் அரைசத வாய்ப்பை இழந்து 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டி20 போட்டிக்குத் திரும்பிய பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்த நாள் சிறப்பாக அமையவில்லை. அவர் விக்கெட் ஏதுமின்றி 4 ஓவர்களில் 57 ரன்களைக் கொடுத்தார்.
அபிஷேக் சர்மாவின் அதிவேக அரைசதம் வீண்
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 19 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ஆனால், அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.
சரிந்த விக்கெட்டுகளும் அயர்லாந்தின் வெற்றியும்
நடுவரிசையில் ஷிவம் துபே 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஜெய் முந்த்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 14 ரன்களுக்கும், ஹர்ஷித் ராணா 8 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது. அயர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரிஸ் அற்புதாமாக பந்துவீசி அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
இறுதியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அயர்லாந்து அணி தரப்பில் மேத்யூ ஹம்ப்ரிஸ் 3.5 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஜெய் முந்த்ரா 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அயர்லாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது.


Click it and Unblock the Notifications

