டப்ளின்: இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இந்திய அணி பயணம் மேற்கொண்டது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் விதிமுறைப்படி வெற்றிபெற்றது. மழைக் காரணமாக முதல் போட்டி முழுமையாக நடத்தப்படவில்லை. இருப்பினும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராவின் கம்பேக் வேற மாதிரி அமைந்தது.

இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள், 2வது டி20 போட்டியை அதிகமாக எதிர்பார்த்திருந்தனர். இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாச, சஞ்சு சாம்சன் 40 ரன்களும், கடைசி நேரத்தில் வந்த ரிங்கு சிங் 21 பந்துகளில் 38 ரன்களும் விளாசினர். தொடர்ந்து வந்த அயர்லாந்து அணி 186 ரன்களை என்ற இலக்கை எட்ட முடியாமல் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி இன்று நடக்கவிருந்தது. இன்றைய ஆட்டத்தில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் தாமதமாவதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் இரவு 10.30 மணி வரை நடுவர்கள் காத்திருந்தனர். ஆனாலும் மழை நிற்காததால், ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை 2-0 என்ற வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தொடர் நாயகனாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட பும்ரா, ரிங்கு சிங்கிடம் கொடுத்தார்.
இதுகுறித்து பும்ரா பேசுகையில், களத்தில் இறங்கி விளையாடுவதற்காக காத்திருப்பது விரக்தியாக இருந்தது. இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டது பெருமையளிக்கிறது. ஒவ்வொரு வீரர்களும் மழை பெய்த கூட ஆர்வமாக இருந்தனர். தற்போதைய சூழலில் காயம் பற்றிய யோசிக்கவில்லை. கேப்டனாக களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் போது, அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஓராண்டு ஓய்வில் இருந்ததாக கூறினீர்கள். நான் 10 மாதங்களாக மட்டுமே ஓய்வில் இருந்தேன் என்று தெரிவித்தார்.