நியூயார்க் : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்துடன் பல பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி நியூயார்க்கின் புறநகர் பகுதியில் நடைபெறுகிறது.
இந்தியா போட்டியை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். அயர்லாந்து அணி பலம் குன்றிய அணியாக கருதப்பட்டாலும், அண்மையில் பாகிஸ்தானை வீழ்த்தி புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் இந்தியா அயர்லாந்து போட்டிக்கு மழை பாதிப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியான வானிலை அறிக்கையில், நியூயார்க்கின் புறநகர் பகுதியில் தற்போது மேகமூட்டத்துடன் இருப்பதாகவும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் போட்டி நியூயார்க் நேரப்படி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.
அப்போது 23 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் போட்டி முடியும் வரை பெரிய அளவுக்கான மழை பாதிப்பு இருக்காது என்றும் ஆனால் க்ளைமேக்ஸ் போது மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளுவதே சாலச் சிறந்ததாக இருக்கும்.
மேலும் போட்டி முடியும்போது மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் டாஸ் வெல்லும் இந்திய அணி மிக விரைவாக அயர்லாந்து அணியை சுருட்டி விட்டு பேட்டிங் செய்யும்போது மீண்டும் குறைந்த பந்துகளில் இலக்கை சேஸ் செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் மழை பெய்யப் போகிறது என்று மனதில் வைத்துக் கொண்டு விக்கெட்டுகளை அதிரடியாக ஆடி இழந்து விட வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. மழை மேகமூட்டத்துடன் இருப்பதால் இந்தியா இன்றைய ஆட்டத்தில் தங்களுடைய மூன்று வேகப்பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்தும் என்றும் தெரிகிறது.