நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா -அயர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறப்போகும் 11 வீரர்கள் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்திய டி20 அணி நிலையான 11 வீரர்கள் கொண்ட அணியை கண்டறியவில்லை என்பதால் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்ய யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் உள்ளது.
இந்திய அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கப் போவது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தான் என உறுதியாக கூறப்படுகிறது. அந்த வகையில் மூன்றாம் வரிசையில் நிலையான அதிரடி பேட்ஸ்மேன் ஒருவர் ஆட வேண்டும். அதற்கு ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்கம் போல நான்காவது வரிசையில் சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார்.

இந்த நான்கு வீரர்களை தாண்டி பந்துவீச்சாளர்களாக ஆறு வீரர்கள் இடம் பெற்றே ஆக வேண்டும். அந்த வகையில் ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி தற்போது ஆட உள்ள இதே நியூயார்க் மைதானத்தில் தான் நடைபெற்றது. அப்போது பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதை அடுத்து சுழற் பந்துவீச்சாளர் அக்சர் பட்டேலுக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்க ரோஹித் சர்மா விரும்புவார்.
ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆறு மற்றும் ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்வார்கள். தற்போது மீதமுள்ள ஐந்தாம் வரிசையில் யாரை களம் இறக்குவது? என்ற குழப்பம் உள்ளது. இந்த இடத்தில் அதிரடி பேட்ஸ்மேன் ஒருவர் ஆட வேண்டும். அவரும் ஃபினிஷராகவும் செயல்பட வேண்டும். இதற்கு சஞ்சு சாம்சன் அல்லது சிவம் துபே ஆகிய இருவரில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
சிவம் துபே கடந்த ஐபிஎல் தொடரில் இதே ஐந்தாம் வரிசையில் களமிறங்கி அதிரடியாக ஆடி இருந்தார். ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் அவர் ஃபார்ம் இழந்தாலும் அவருக்கு ஐந்தாம் வரிசையில் பேட்டிங் செய்வதில் அதிக அனுபவம் உள்ளது. மறுபுறம் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக டாப் ஆர்டரில் தான் பேட்டிங் ஆடி இருந்தார்.
இருவருமே தற்போது பயிற்சி போட்டியில் பேட்டிங்கில் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இந்த நிலையில் சிவம் துபே ஏற்கனவே ஐந்தாம் வரிசையில் ஆடி இருக்கிறார் என்பதோடு அவர் வேகப் பந்துவீச்சாளராகவும் அணிக்கு கை கொடுப்பார். இதை கருத்தில் கொண்டு அவரைத்தான் கேப்டன் ரோஹித் சர்மா அணியில் ஆட வைப்பார் என கூறப்படுகிறது.
அயர்லாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் :
இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.