டெல்லி: ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் நமீபியாவை எதிர்கொள்கிறது. டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நமிபியா அணி கேப்டன் எராஸ்மஸ் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அப்போது பேட்டிங்கிற்கு ஆடுகளம் சாதகமாக மாறும் என்று நினைக்கின்றேன்.

கடைசி போட்டியில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. இந்த போட்டியின் பெரிய அளவு பார்ட்னர்ஷிப் சேர்த்து ரன்கள் அடிக்க வேண்டும் என நம்புகிறேன். இங்கு நிறைய ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் நல்ல பொழுதுபோக்கை கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.
இந்தியாவில் விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியில் இன்று இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், போட்டியில் வெற்றி பெறும் வரை நான் டாசை இழப்பது குறித்து கவலைப்பட மாட்டேன். நாங்கள் முதலில் பேட்டிங்ஸ் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.
இது மிகப்பெரிய தொடர். இந்த தொடரில் பனிப்பொழிவு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இது போன்ற போட்டிகளில் பனிப்பொழிவில் பந்து வீசி இலக்கை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
அபிஷேக் சர்மா இன்னும் உடல்நலம் தேறவில்லை. அவருக்கு இன்னும் முழு உடல் தகுதியை பெறவில்லை. இதனால் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் அவர் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணிக்கு திரும்பி இருக்கின்றார். இதேபோன்று பும்ரா, சிராஜுக்கு பதிலாக இன்று ஆட்டத்தில் விளையாடுகிறார் என்று சூரிய குமார் தெரிவித்துள்ளார்.