கேண்டி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று நேபாளத்தை முக்கியமான லீக் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு செல்ல முடியும்.
இந்த நிலையில் கேண்டியில் இன்றும் மழை பெய்து வருவதால் போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. டாஸ் வீசும்போது மழை மீண்டும் குறிக்கிட்டதால் ஆடுகளம் தார்பாயால் மூடப்பட்டது.

எனினும் இந்த டாசை வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் நாங்கள் பந்து வீசுவதற்கு குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. கடந்த போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்தோம். இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக இந்த முடிவை தேர்வு செய்துள்ளோம்.
இன்றும் மழை பெய்யுமா பெய்யாதா என்ற சந்தேகம் இருக்கிறது. இதனால் முக்கியமான போட்டிகளுக்கு செல்வதற்கு முன்பு பந்துவீச்சாளர்களுக்கு விளையாடிய அனுபவம் வேண்டும் என்பதற்காக நாங்கள் பார்க்கிறோம். கடந்த போட்டியில் நாங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளானோம். நான்கு விக்கெட்டுகளை விரைவாக இழந்தோம்.எனினும் ஹர்திக் பாண்டியாவும் இஷான் கிஷனும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்கள்.
அதுவும் இஷான் கிஷன் பாகிஸ்தானுக்கு எதிராக தன்னுடைய முதல் போட்டியில் விளையாடினார். அதில் அவர் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். பேட்டிங்கில் அவருடைய முதிர்ச்சி தெரிந்தது. இது நிச்சயம் இந்தியாவுக்கு நல்ல விஷயம் தான். எங்கள் அணியில் இன்று பும்ரா இல்லை. அவருக்கு பதில் ஷமி இடம் பெற்று இருக்கிறார் என்று ரோகித் சர்மா கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய நேபாள் அணி கேப்டன் ரோகித் பவுடா, நாங்களும் பந்து வீச தான் இருந்தோம். இன்றைய நாள் நேபாள் கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாள். எங்களுடைய திறமையை உலக மக்களுக்கு காட்ட நல்ல வாய்ப்பாக இந்த போட்டி அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார் .