திருவனந்தபுரம் : இந்திய அணி உலகக்கோப்பை பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்று ஆடி வருகிறது. திங்கள்கிழமை அன்று அடுத்த பயிற்சிப் போட்டியில் ஆட உள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரின் பயிற்சிப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா நேற்று தன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோத இருந்தது.

ஆனால், மழை காரணமாக அந்தப் போட்டி கைவிடப்பட்டது. இதை அடுத்து இந்திய அணி தங்களின் இரண்டாவது பயிற்சிப் போட்டியில் பங்கேற்க திருவனந்தபுரம் சென்றுள்ளது. அங்கே நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோத உள்ளது.
திருவனந்தபுரத்தில் தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இடையே ஆன முதல் பயிற்சிப் போட்டி மழையால் கை விடப்பட்டது. அடுத்து ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் இடையே ஆன பயிற்சிப் போட்டி 23 ஓவர்களாக குறைக்கப்பட்டும் மழையால் போட்டி பாதியில் கை விடப்பட்டது.
இந்த நிலையில், அதே திருவனந்தபுரத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியிலாவது மழை குறுக்கிடாமல் இருக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போட்டி துவங்கும் நேரம் : நாளை (அக்டோபர் 2) இந்தப் போட்டி மதியம் 2 மணிக்கு துவங்கும். 1.30 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்தியா - நெதர்லாந்து மோதும் உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியை எந்த சேனலில் காணலாம்?
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் இந்தப் போட்டியை காணலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தமிழ் வர்ணனையுடன் இந்த போட்டியை கண்டு களிக்கலாம்.
இந்தியா - நெதர்லாந்து மோதும் உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங்கில் எப்படி பார்ப்பது?
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இணையதளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் இந்தியா - நெதர்லாந்து போட்டியை காணலாம். ஹாட்ஸ்டார் சந்தா செலுத்தாதவர்களும் இலவசமாக இந்தப் போட்டியை காணலாம்.
உலகக்கோப்பை பயிற்சிப் போட்டியில் ஆட உள்ள இந்திய அணி வீரர்கள் விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷூப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷமி, சூர்யகுமார் யாதவ்.
பயிற்சிப் போட்டியில் எத்தனை வீரர்கள் வேண்டுமானாலும் பேட்டிங் செய்து கொள்ளலாம். அதே போல பேட்டிங் செய்யும் போது இடம் பெறாத வீரர் பந்து வீசலாம் என்பதால் இந்திய அணி மாற்று வீரர்கள் உட்பட 15 வீரர்களையும் இந்தப் போட்டியில் ஆட வைக்க வாய்ப்பு உள்ளது.