பெங்களூர் : நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் திடீரென விராட் கோலியை பவுலிங் போட அழைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. பலரும் ரசிகர்கள் கேட்டதால் தான் ரோஹித் இதை செய்தார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதற்கான உண்மையான காரணம் வேறு.
இந்திய ரசிகர்கள் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியின் போதும் விராட் கோலியை பந்து வீச வையுங்கள் என கோஷம் எழுப்பி வருகின்றனர். நெதர்லாந்து போட்டியின் போது இந்த கோஷம் அதிகமாக இருந்தது. விராட் கோலி ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சேர்ந்தவர் என்பதால் இந்தப் போட்டி நடந்த பெங்களூரில் கோலி ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். அதனால், கோஷம் அதிகமாக இருந்தது

இந்த நிலையில், விராட் கோலியை பவுலிங் வீச அழைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. ரசிகர்கள் கோஷத்தால் தான் இதை செய்தார் என பலரும் நினைத்த நிலையில், உண்மையில் அணி இக்கட்டான நிலையில் இருந்த போது உதவவே கோலியை அழைத்து இருந்தார் ரோஹித் சர்மா.
நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 61, சுப்மன் கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் 128, கே எல் ராகுல் 108 ரன்கள் குவித்தனர்.
நெதர்லாந்து அணி அடுத்து 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸிங் செய்ய வந்தது. அந்த அணி 66 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து ஆடி வந்தது. அப்போது 15வது ஓவரின் போது முகமது சிராஜ் ஒரு கேட்ச்சை தவறவிட்டார். அப்போது பந்து அவரது தொண்டையில் வந்து விழுந்தது. முதலில் அவர் சமாளித்து விட்டார்.
எனினும், அடுத்த ஓவரின் போது அவருக்கு வலி அதிகமாக இருந்ததால் அவர் அறைக்கு திரும்பினார். இந்திய அணியில் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களே உள்ளனர், எனவே, ஒரு பந்துவீச்சாளர் காயத்தால் பாதியில் விலகினால் அவரது மீதமுள்ள ஓவர்களை வேறு பகுதி நேர பந்துவீச்சாளர்கள் தான் வீசியாக வேண்டும்.
அந்த அடிப்படையில் மித வேகப் பந்துவீச்சை வீசக் கூடிய விராட் கோலியை அழைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அவர் முதல் ஓவரில் 7 ரன்கள் கொடுத்த போதும் தன் இரண்டாவது ஓவரில் 1 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.
நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் விராட் கோலி. இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இது ரசிகர்களுக்கு சிறந்த தீபாவளிப் பரிசாக அமைந்தது. ஆனால், இது அணியின் சூழ்நிலை கருதி தான் நடந்ததே ஒழிய ரசிகர்கள் கேட்டதற்காக நடக்கவில்லை.
விராட் கோலி இந்தப் போட்டியில் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். கோலி பந்து வீசி விக்கெட் எடுத்ததால் மற்ற பகுதி நேர பந்துவீச்சாளர்களையும் பயன்படுத்த முடிவு செய்த ரோஹித் சர்மா, அடுத்து சுப்மன் கில், சூர்யகுமார் யாதவை பந்து வீச வைத்தார். பின்னர் 9 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், ரோஹித் சர்மா நீண்ட காலம் கழித்து தன் ஸ்பின் திறமையை காண்பிக்க பந்தை கையில் எடுத்தார். அவர் வீசிய 48வது ஓவரில் நெதர்லாந்து அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.