மும்பை : 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதே இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் தான்.
ஆனால், இப்போது இருக்கும் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறந்த பவுலிங் கூட்டணி இல்லை எனக் கூறி அதிர வைத்துள்ளார் கங்குலி. அதற்கு பதிலாக வேறு ஒரு பவுலிங் கூட்டணி தான் சிறந்தது எனவும் கூறி இருக்கிறார்.

2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி எட்டு லீக் போட்டிகளில் ஆடி எட்டிலும் வெற்றிகளை குவித்துள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா பேட்டிங்கில் அணிக்கு கை கொடுத்தாலும், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஜடேஜா, குல்தீப் பந்துவீச்சால் தான் இந்திய அணி இதில் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளை 200 ரன்களுக்குள் சுருட்டியது. இந்திய வேகப் பந்துவீச்சாளர்களிடம் சிக்கி இலங்கை அணி 55 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணி சேஸிங்கில் 129 ரன்களுக்கு சுருண்டு மோசமாக வீழ்ந்தது. வலுவான தென்னாப்பிரிக்கா அணி வெறும் 83 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.
இப்படி மற்ற அணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி. அதிலும் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, ஷமி, முகமது சிராஜ் பங்கு மிகவும் அதிகம். எட்டு லீக் போட்டிகளில் ஆடி பும்ரா 15 விக்கெட்கள், சிராஜ் 10 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர். வெறும் நான்கு லீக் போட்டிகளில் ஆடி முகமது ஷமி 16 விக்கெட்கள் சாய்த்து இருக்கிறார். குல்தீப் யாதவ் 12, ஜடேஜா 14 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளனர்.
இந்த நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கங்குலியிடம் தற்போது இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு பற்றி சிறந்த பவுலிங் கூட்டணி என புகழ்ந்து பேசப்படுகிறதே என கேட்ட போது, அவர், "இது இந்தியாவின் சிறந்த பவுலிங் கூட்டணி இல்லை. ஜாகிர் கான், ஜவகல் ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ரா 2003 உலகக்கோப்பையில் மிக அற்புதமாக வீசினார்கள்" என்றார்.
2003 உலகக்கோப்பை தொடரில் இந்தியா இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அந்தத் தொடரில் ஜாகிர் கான் 18 விக்கெட்கள், ஜவகல் ஸ்ரீநாத் 16 விக்கெட்கள், ஆஷிஷ் நெஹ்ரா 15 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன தான் ஜாகிர் கான், நெஹ்ரா, ஸ்ரீநாத் கூட்டணி சிறப்பாக வீசி இருந்தாலும், சிறந்த பவுலிங் கூட்டணி இல்லை எனக் கூறி சிறப்பாக வீசி வரும் பும்ரா, முகமது ஷமி ஈகோவை சீண்டி விட்டுள்ளார் சவுரவ் கங்குலி.