மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது.
இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினாலும் இனி இந்தியா கையில் எடுக்கும் திட்டத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழற் பங்கு வீச்சாளர்களை வைத்து களமிறங்கியது. ஆனால் அதன் பிறகு களம் இறங்கிய மூன்று போட்டிகளிலும் நான்கு வேக பந்துவீச்சாளர்கள் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் என்று திட்டத்தை மாற்றிக் கொண்டது. இது தவறு என்று பல கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இதனால் இந்திய அணி தாங்கள் கடைப்பிடித்து வந்த திட்டத்தை மாற்ற வேண்டும். சர்துல் தாக்கூரை மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக கருதக்கூடாது. ஏனென்றால் ஷர்துல் தாக்கூர் அதிக ரன்களை கசிய விடுகிறார்.
இதன் காரணமாக இந்திய அணி முகமது சமியை அணிக்குள் கொண்டு வர வேண்டும்.சமி முக்கிய பவுலராக அணியில் திகழ்வார் என்பதால் இந்திய அணி மூன்று முழு நேர வேகப்பந்துவீச்சாளர்கள் களமிறங்குவது அவசியம். அதேசமயம் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக அஸ்வினை சேர்க்க வேண்டும். அஸ்வின் திறமை வாய்ந்த சுழல் பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் நல்ல பேட்ஸ்மேன் ஆகவும் இருக்கிறார்.
இதனால் கீழ் வரிசையில் அஸ்வின் பேட்டிங், இந்திய அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும். ஹர்திக் பாண்டியா அளவுக்கு அஸ்வின் திறமையான பவுலராகாவிட்டாலும், நிச்சயம் ரன்களை பெற்றுக் கொடுப்பார். மேலும் அஸ்வினின் சுழற் பந்துவீச்சு வெளிநாட்டு வீரர்களுக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுக்கும். ஹர்திக் பாண்டியா என்ற ஆல் ரவுண்டர் இல்லாததால் தற்போது முகமது சமி என்ற முழுநேர வேகப்பந்துவீச்சாளரையும் அஸ்வின் என முழு நேர சுழற் பந்துவீச்சாளர் மற்றும் பகுதிநேர பேட்ஸ்மேனையும் இந்தியா கையில் எடுத்தால் மட்டுமே அவர்களுடைய அணியின் பேலன்ஸ் சரியாக இருக்கும்.