நாக்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அதற்குப் பழிதீர்க்கும் முனைப்புடன் அதே நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இன்று (ஜனவரி 21) நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் களமிறங்குகிறது.
டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்க இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான பயிற்சியாக அமையும். புதன்கிழமை (ஜனவரி 21) நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான ஆடுகளத் தன்மை மற்றும் வானிலை நிலவரம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

நாக்பூர் ஜம்தா மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு முழுமையாகச் சாதகமான ஆடுகளமாக இருந்ததில்லை. பெங்களூரு அல்லது மும்பை வான்கடே மைதானங்களைப் போல இங்கு ரன் மழை பொழிவதை எதிர்பார்ப்பது கடினம். இது திட்டமிட்டு விளையாட வேண்டிய ஆடுகளம்.
இந்த மைதானம் வரலாற்று ரீதியாகவே சுழற்பந்து வீச்சாளர்களுக்குப் பெரிதும் கைகொடுத்துள்ளது. ஆட்டம் செல்லச் செல்ல ஆடுகளம் மந்தமாக மாறும் என்பதால் பந்து நன்றாகத் திரும்பும் வாய்ப்புள்ளது. மேலும், இங்குள்ள பவுண்டரி எல்லைகள் மிகவும் பெரியவை. எனவே, பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் போன்ற ஸ்பின்னர்களுக்கு இந்த ஆடுகளம் "விருந்து" படைக்கலாம்.
இங்கு இதுவரை நடைபெற்ற 13 சர்வதேச டி20 போட்டிகளில், 8 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் வேகம் குறைந்து மந்தமாவதே இதற்கு முக்கியக் காரணம். எனவே, புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்யவே வாய்ப்புகள் அதிகம்.
ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், நாக்பூரில் இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை. வானம் தெளிவாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போட்டியின் போது வெப்பநிலை 19 முதல் 21 டிகிரி செல்சியஸ் வரை இதமாக இருக்கும்.
மழை பயம் இல்லை என்றாலும், பனிப்பொழிவு ஆட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜனவரி மாதம் என்பதால் இரவு 8 மணிக்கு மேல் அதிகப்படியான பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது. பனிப்பொழிவு அதிகம் இருந்தால், இரண்டாவது பந்துவீசும் அணிக்கு பந்தை 'கிரிப்' செய்து வீசுவது கடினமாகிவிடும். இது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக மாறக்கூடும்.
ஆடுகளத்தின் வரலாறு முதலில் பேட்டிங் செய்வதற்குச் சாதகமாக இருந்தாலும், இந்த பனிப்பொழிவு காரணமாக கேப்டன்கள் சேஸிங் செய்யவும் யோசிக்கலாம்.