ராஜ்கோட்: நியூசிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், கிறிஸ்டியன் கிளார்க்கின் அசத்தலான பந்துவீச்சால் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். ராஜ்கோட்டின் நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய துணைக்கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 17 பந்துகளில் வெறும் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
22வது ஓவரில் கிளார்க் வீசிய பந்தை infield-ஐ தாண்டி அடிக்க முயன்ற ஐயர், மிட்-ஆஃப் திசையில் நின்ற நியூசிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல்லிடம் பிடிபட்டார். தொடர்ச்சியாக ஐந்து டாட் பந்துகளை சந்தித்த அழுத்தத்தில் அவர் விக்கெட்டை தாரை வார்த்தார்.

இது கிளார்க்கின் இரண்டாவது விக்கெட்டாகும். முன்னதாக, தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவை 38 பந்துகளில் 24 ரன்களில் வெளியேற்றி, 70 ரன்கள் குவித்த தொடக்க பார்ட்னர்ஷிப்பை கிளார்க் பிரித்திருந்தார். ஸ்ரேயஸ் ஐயரைத் தொடர்ந்து, விராட் கோலியையும் 29 பந்துகளில் 23 ரன்களில் தனது அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாக்கினார்.
இதனால், இந்திய அணி 23.4 ஓவர்களில் 119 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல். ராகுல் ஆகியோர் தற்போது களத்தில் உள்ளனர். இந்த ஜோடி ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணிக்கு வலுசேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
முன்னதாக, தொடக்க வீரர் ஷுப்மன் கில், 53 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒன்பது பவுண்டரிகள் உட்பட 56 ரன்கள் குவித்து இந்திய அணிக்கான அதிகபட்ச ஸ்கோர் அடித்தார். முதல் போட்டியை வதோதராவில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இழந்த நியூசிலாந்துக்கு இது வாழ்வா சாவா போட்டியாகும். இந்தியாவுக்கு எட்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதிலும் ஒருநாள் தொடரை Kiwis ஒருபோதும் வென்றதில்லை.
கடந்த 2023ல் 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி, தற்போது இத்தொடரில் 2-0 என்ற வெல்ல முடியாத முன்னிலையை எடுக்க நோக்குகிறது. என்றாலும், ராஜ்கோட் மைதானத்தில் இந்தியா விளையாடியுள்ள நான்கு ஒருநாள் போட்டிகளில் ஒரு வெற்றியையே பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.