IND vs NZ: உலக டி20 வரலாற்றிலேயே மெகா சாதனையை செய்த இந்திய அணி.. மூன்று வரலாற்று சாதனைகள்
ராய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெறும் 15.2 ஓவரில் எட்டிப்பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ராய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடியால் பல்வேறு சாதனைகள் தவிடுபொடியாகின.
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக 2023ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களை இந்தியா சேசிங் செய்திருந்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் 209 ரன்களைத் துரத்தி அந்தச் சாதனையைச் சமன் செய்துள்ளது.

இந்திய அணியின் சேசிங் பட்டியல்:
209 ரன்கள் - எதிர் நியூசிலாந்து (ராய்ப்பூர், 2026)
209 ரன்கள் - எதிர் ஆஸ்திரேலியா (விசாகப்பட்டினம், 2023)
208 ரன்கள் - எதிர் மேற்கிந்திய தீவுகள் (ஹைதராபாத், 2019)
207 ரன்கள் - எதிர் இலங்கை (மொஹாலி, 2009)
உலக சாதனை முறியடிப்பு
200 ரன்களுக்கும் மேலான இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. பொதுவாக 200 ரன்களைத் துரத்துவதே கடினம். ஆனால், இந்திய அணி 28 பந்துகள் மீதம் இருக்கும்போதே இலக்கை எட்டிப் பிடித்து நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதற்கு முன் 2025ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி 24 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. அதனை இந்தியா தற்போது முறியடித்துள்ளது.
அதிகமுறை 200 ரன்களைத் துரத்திய அணிகள்
சர்வதேச டி20 போட்டிகளில் 200 ரன்களுக்கும் மேலான இலக்கை அதிகமுறை வெற்றிகரமாகத் துரத்திய அணிகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா - 7 முறை
இந்தியா - 6 முறை
தென்னாப்பிரிக்கா - 5 முறை
பாகிஸ்தான் - 4 முறை
ஆட்டத்தின் சுருக்கம்
டாஸ் வென்று இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 44 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 47 ரன்களும் எடுத்தனர்.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். ஆனால், பின்னர் இணைந்த இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 82 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சிவம் துபே 16 பந்துகளில் 34 ரன்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 15.2 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications