பேட்டிங் சொதப்பல்
ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் - சுப்மன் கில் ஜோடி நிதானமாக ரன் குவிக்க தொடங்கிய போது, அதற்கு நியூசி, பவுலர்கள் தடைகற்களாக இருந்தனர். தவான் 28 ரன்களுக்கும், சுப்மன் கில் 13 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதன்பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர்களான ரிஷப் பண்ட் 10, சூர்யகுமார் யாதவ் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தனர்.
இறுதி போராட்டம்
பவுலிங்கிலும் உதவுவார் என சேர்க்கப்பட்ட தீபக் ஹூடா 12 ரன்களையே எடுத்தார். மறுமுனையில் தூண் போல நிலைத்து நின்ற ஸ்ரேயாஸ் ஐயர் 59 பந்துகளில் 49 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார். இதே போல வாஷிங்டன் சுந்தரும் லோயர் ஆர்டரில் 51 ரன்களை குவித்தார். இதனால் 47.3 ஓவர்களில் இந்திய அணி 219 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
நியூசிலாந்தின் இன்னிங்ஸ்
சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. ஓப்பனிங் வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே ஜோடி முதல் விக்கெட்டிற்கு 97 ரன்களை விளாசினர். சிறப்பாக விளையாடி வந்த ஃபின் ஆலன் 57 ரன்களுக்கு அவுட்டாகிவிட, கான்வே மறுமுனையில் 38 ரன்களை அடித்திருந்தார்.
மழை பாதிப்பு
நியூசிலாந்து அணி சரியாக 18 ஓவர்களில் 104 ரன்களை அடித்திருந்த போது திடீரென மழை குறுக்கிட்டது. நீண்ட நேரமாக மழை நிற்காமல் பெய்துக்கொண்டே இருந்ததால் போட்டி கைவிடப்பட்டது. முடிவு எட்டப்பட வேண்டுமென்றால் குறைந்தது 20 ஓவர்கள் வீசப்பட்டிருக்க வேண்டும். வெறும் 2 ஓவர்களை மட்டும் நியூசிலாந்து அணி விளையாடி இருந்தால் வெற்றி பெற்றிருக்கும். எனினும் தற்போது 1 - 0 என தொடரை கைப்பற்றியுள்ளது.