சரிவிலிருந்து மீட்பு
இதில், மழை பெய்யும் என தெரிந்தும், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சௌதி பேட்டிங்கை தேர்வு செய்து தவறை செய்தார். தொடக்க வீரர் ஃபின் ஆலன் 3 ரன்களில் ஆட்டமிழக்க,மார்க் சாப்மேன் 14 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து 44 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து நியூசிலாந்து தடுமாறிய நிலையில், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளன் பிலிப்ஸ் மற்றும் கான்வே ஆகியோர் அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
அடுத்தடுத்து அரைசதம்
மைதானத்தின் வலது புறமும், இடது புறமும் பவுண்டரியின் எல்லை கோடு குறைவாக இருந்ததால், இதனை பயன்படுத்தி பிலிப்ஸ், கான்வே ஜோடி பவுண்டரிகளை அடித்து ரன்களை உய்ர்த்தினர். கான்வே 59 ரன்களும், பிலிப்ஸ் 53 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசு, நியுசிலாந்து பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
161 ரன்கள்
இதன் காரணமாக நியூசிலாந்த அணி 19.4வது ஓவரில் 160 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ஆர்ஸ்தீப், முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது.
கோல்டன் டக்
ரிஷப் பண்ட் 5 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளை விளாசிய நிலையில் 11 ரன்களில் வெளியேறினார்.இஷான் கிஷன் 10 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் கோல்டன் டக் ஆனார். சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் 1 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த நிலையில், 13 ரன்களில் வெளியேறினார்.
தொடரை வென்றது இந்தியா
இதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். இந்திய அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. அப்போது, டக் வொர்த் லூயுஸ் விதிப்படி தேவையான இலக்கில் இந்திய அணி சரி சமமாக இருந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடந்து இந்திய அணி தொடரை 1க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து மூன்று டி20 தொடரை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.