வெல்லிங்டனில் இன்று 4வது போட்டி
நியூசிலாந்தில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் மூன்றுவிதமான தொடர்களில் இரு அணிகளும் மோதவுள்ளன. முதலில் விளையாடப்பட்டுவரும் சர்வதேச டி20 தொடரின் முதல் 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 4வது போட்டி வெல்லிங்டனில் இன்று நடைபெறவுள்ளது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
கடந்த 3வது போட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் இளம் வீரர்களின் திறனை சோதிக்கும் வகையில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல வெல்லிங்டனில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளது.
கேப்டன் விராட் கோலி உறுதி
நியூசிலாந்து அணியுடன் இந்தியா மோதிவரும் 5 போட்டிகளை கொண்ட சர்வதேச டி20 தொடரில் முதல் 3 போட்டிகள் ஆக்லாந்து மற்றும் ஹாமில்டனில் நடந்து முடிந்துள்ள நிலையில், 4வது போட்டி இன்று பகல் வெல்லிங்டனில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் 5 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் 5 போட்டிகளிலும் வெல்ல இந்தியா தீவிரம் காட்டும் என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.
சாஹலுக்கு பதிலாக சுந்தர்
விராட் கோலி தெரிவித்தபடி வெல்லிங்டனில் இன்னும் சிறிது நேரத்தில் துவங்கவுள்ள இந்த போட்டியில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக நவ்தீப் சாய்னியும் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணீஷ் பாண்டே மற்றும் ஷிவம் தூபே போன்றவர்களுக்கும் திறனை நிரூபிக்க போட்டிகள் தேவைப்படும் நிலையில், முதல் நான்கு இடத்தில் விளையாடும் வீரர்களுக்கு பதிலாக இவர்கள் களமிறக்க படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ரூசிற்கு இடத்தை விட்டுக்கொடுத்த கிராண்ட்ஹோம்
இதேபோல நியூசிலாந்து அணியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. காயம் காரணமாக 3 பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு புதிய பௌலர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேபோல கோலின் டி கிராண்ட்ஹோமிற்கு பதிலாக பேட்ஸ்மேன் டாம் புரூஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த போட்டியில் அபாரமாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.