துபாய்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி துபாய் குரூப் சுற்று போட்டிக்கான பிட்ச் மற்றும் வானிலை எப்படி இருக்கும் என்பது பற்றி பார்க்கலாம். இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதுவரை இந்திய அணி ஆடிய மற்ற இரண்டு போட்டிகளும் இதே துபாய் மைதானத்தில் தான் நடைபெற்றன.
இந்த மைதானம் மிகவும் மந்தமாகவே இருக்கும். இதுவரை அப்படி தான் இருந்துள்ளது. துபாயில் 50 ஓவர்கள் வரை நின்று பேட்டிங் செய்தாலும் 300 ரன்களை எட்டுவது என்பது சவாலான விஷயமாகவே இருக்கும். இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் 250 ரன்கள் என்ற ஸ்கோரை கூட முதலில் பேட்டிங் செய்த அணி தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பிட்ச்சை பொறுத்தவரை அது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் மிகவும் கவனமாக விளையாடினால் மட்டுமே தாக்குப் பிடித்து ரன் குவிக்க முடியும். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக மெதுவான பிட்ச் சூழ்நிலை நிலவும். வேகப் பந்துவீச்சாளர்கள் பவர்பிளே ஓவர்களில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.
துபாயில் வானிலை எப்போதும் வெப்பமாகவே இருக்கும். இந்த தொடர் துவங்கும் முன் அங்கு மழை பெய்திருந்தது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் துவங்கிய பின் துபாயில் மழை பெய்யவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போதும் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
வெப்பம் அதிகபட்சம் 24 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சம் 18 டிகிரி செல்சியஸ் வரை நிலவும் எனவும், காற்றில் உள்ள ஈரப்பதம் அதிகபட்சம் 52 சதவீதம் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டாவதாக பவுலிங் செய்யும் அணிக்கு பனிப்பொழிவால் பிரச்சனை ஏற்படாது என எதிர்பார்க்கலாம்.