பெங்களூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஆடி வரும் முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் மழையால் துவக்கத்தில் தடைப்பட்டது. நியூசிலாந்து அணி 107 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் உள்ளது.இந்த நிலையில் மழையால் 10.15க்கு போட்டி துவங்கியது.
பும்ரா முதல் ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார். நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இந்திய அணியை பொறுத்தவரை நியூசிலாந்து அணியின் 10 விக்கெட்களையும் விரைவாக வீழ்த்த வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஐந்தாம் நாள் அன்று அதிக நேரம் மழை பெய்தால் போட்டி டிரா ஆக வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த அளவுக்கு மழை இருக்காது என வானிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. நியூசிலாந்து அணி மழைக்கு முன் போட்டியை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் உள்ளது. மறுபுறம் இந்திய அணி முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தி உள்ளது.
மழையால் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. காலை 10.15 முதல் 12.30 வரை முதல் பகுதி ஆட்டம் நடைபெறும். பின்னர் 12.30 முதல் 13.10 வரை மதிய உணவு இடைவேளை விடப்படும். பின்னர் 13.10 முதல் 15.10 வரை இரண்டாம் பகுதி ஆட்டம் நடைபெறும். பின்னர் 20 நிமிடம் தேநீர் இடைவேளை விடப்படும். 15.30 முதல் 17.15 வரை மூன்றாவது மற்றும் கடைசி பகுதி ஆட்டம் நடைபெறும்.