துபாய்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விராட் கோலியின் விக்கெட் வீழ்ந்த விதம் அனைவரையும் வாயடைக்க வைத்தது. நியூசிலாந்து அணியின் ஃபீல்டர் கிளென் பிலிப்ஸ் அசுரத்தனமாக பாய்ந்து 23 மீட்டரில் விராட் கோலி அடித்த பந்தை கேட்ச் பிடித்தார். அதை பார்த்து விராட் கோலியே அரண்டு போனார். இந்திய ரசிகர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்றில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் பேட்டிங்கில் துவக்கத்திலேயே சரிவு ஏற்பட்டது. சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ரோஹித் சர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி கடந்த போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்திருந்ததால், இந்த முறை சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் எதிர்பாராத வகையில் ஆட்டம் இழந்தார்.
மாட் ஹென்றி வீசிய பந்தில் விராட் கோலி பேக்வேர்ட் பாயிண்டில் ஒரு ஷாட் அடித்தார். அந்த திசையில் நின்று இருந்த கிளென் பிலிப்ஸ் பாய்ந்து சென்று பந்தை கேட்ச் பிடித்தார். பொதுவாக இதுபோல நெருக்கமாக நிற்கும் ஃபீல்டர்களால் வேகமாக அடிக்கப்படும் பந்துகளை துல்லியமாக கேட்ச் பிடிக்க முடியாது.
சில சமயம் அவர்கள் பாய்ந்து பந்தை தடுப்பார்கள். அதுவே சிறந்த ஃபீல்டிங்காக பாராட்டப்படும். ஆனால் பிலிப்ஸ் பாய்ந்த விதமும், துல்லியமாக கேட்ச் பிடித்த விதமும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. விராட் கோலி இதை நம்ப முடியாமல் சில வினாடிகள் நின்று பார்த்தார். இந்திய ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர்.
பிலிப்ஸ் பிடித்த கேட்ச்சால் விராட் கோலி 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 30 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது. கிளென் பிலிப்ஸ் சமீப காலமாகவே ஃபீல்டிங்கில் இதுபோன்ற சூப்பர் மேன் கேட்ச்களை பிடித்து அசத்தி வருகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக விராட் கோலியின் கேட்ச்சை அவர் பிடித்தது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
விராட் கோலி ஆட்டம் இழந்த நிலையில் அக்சர் படேல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து பேட்டிங் செய்தனர். இந்திய அணியின் ஸ்கோர் வெகுவாக சரிந்தது. மூன்று விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் இந்திய அணி 10 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இது மிக மோசமான பவர் பிளே ஸ்கோராக அமைந்தது.