தரம்சாலா : இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டியின் போது திடீரென கேப்டன் பொறுப்பை மூன்று ஓவர்களுக்கு ஏற்றார் கே எல் ராகுல்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 10வது ஓவர் முடிந்த உடன் கையை பிடித்துக் கொண்டே வேக வேகமாக வெளியேறினார். அதன் பின் 13வது ஓவர் முடிந்த பின்னரே களத்துக்கு வந்தார். அதுவரை கே எல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்தினார்.
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் டெவான் கான்வே ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அடுத்து வில் யங் 27 பந்துகளை சந்தித்து 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், 10வது ஓவரின் போது பீல்டிங் செய்த ரோஹித் சர்மா கை விரல்களில் காயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் 10வது ஓவரின் முடிவில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ரோஹித் சர்மா இல்லாத நிலையில், கே எல் ராகுல் கேப்டன் பொறுப்பை ஏற்றார். உலகக்கோப்பை தொடரின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தான். ஆனால், அவர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அதனால், அதற்கு அடுத்த நிலையில் உள்ள கே எல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார்.

சிலர் முன்னாள் கேப்டன் விராட் கோலியை தற்காலிக கேப்டனாக இருக்க வைத்திருக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் சொன்னதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த மூன்று ஓவர்களில் ஜடேஜா கேட்ச்சை நழுவ விட்டதை தவிர வேறு எந்த முக்கிய விஷயமும் நடக்கவில்லை. அதனால், கே எல் ராகுல் கேப்டனாக இருந்தது பற்றி வேறு விமர்சனம் எதுவும் எழவில்லை.
முன்னதாக சிராஜ், ஷமி நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினர். எனினும், அதன் பின் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக ஆடி போட்டியை தன் வசம் எடுத்துச் சென்றார்.