மும்பை: 2026 ஆண்டின் முதல் இந்திய கிரிக்கெட் தொடராக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அமையப்போகிறது. வரும் ஜனவரி 11-ம் தேதி வதோதராவில் இந்தத் தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி வரும் ஜனவரி 3-ம் தேதி (சனிக்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கடந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் பங்கேற்காத அல்லது காயம் காரணமாக நீக்கப்பட்ட 5 முக்கிய வீரர்கள் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பெற உள்ளனர். அந்த 5 வீரர்கள் யார் என்று பார்க்கலாம்.

கழுத்து வலி காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் தொடரைத் தவறவிட்டவர் நமது கேப்டன் சுப்மன் கில். தற்போது அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார். ஜனவரி 11-ம் தேதி தொடங்கும் நியூசிலாந்து தொடரில் அவர் மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார்.
கடைசியாக 2025 மார்ச் மாதம் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் ஆடிய முகமது ஷமி, அதன்பிறகு காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். உலகக்கோப்பை ஹீரோவின் வருகை நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் நடுக்கத்தை ஏற்படுத்தும்.
இதுதான் லிஸ்டிலேயே பெரிய சர்ப்ரைஸ். கடைசியாக 2023 உலகக்கோப்பையில் ஆடிய இஷான் கிஷன், அதன்பிறகு அணியில் ஓரங்கட்டப்பட்டார். சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடிக்க இஷான் கிஷனுக்கு அழைப்பு வரவுள்ளது. ரிஷப் பண்ட் அல்லது இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்தில் இவர் தேர்வு செய்யப்படலாம்.
தென்னாப்பிரிக்கத் தொடரில் கழட்டிவிடப்பட்ட ஆல்-ரவுண்டர் அக்சர் படேல், மீண்டும் அணிக்குத் திரும்ப உள்ளார். வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக அக்சர் படேலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். 5-வது இடத்தில் பேட்டிங் மற்றும் மிடில் ஓவர்களில் பந்துவீச்சு என அக்சர் அணியின் சமநிலையை சரி செய்வார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடிய சிராஜ், அதன்பிறகு தென்னாப்பிரிக்கத் தொடரில் தேர்வு செய்யப்படவில்லை. தற்போது அவரும் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட உள்ளார். ஷமி, சிராஜ் கூட்டணி அமைந்தால் பந்துவீச்சு அனல் பறக்கும். ஜனவரி 3-ம் தேதி வெளியாகப்போகும் அணி அறிவிப்பில் இந்த 5 பெயர்களும் இருப்பது கிட்டத்தட்ட உறுதி.