அடுத்த வாரத்தில் துவக்கம்
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய சர்வதேச டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் எஞ்சிய 2 போட்டிகளை விளையாடவுள்ள நிலையில், அடுத்ததாக நியூசிலாந்துடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளை எதிர்கொள்ள உள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 பந்துவீச்சாளர்கள் நீக்கம்
இந்தியாவுடனான சர்வதேச ஒருநாள் தொடரில் மோதவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் ட்ரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன் மற்றும் மாட் ஹென்றி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆஸ்திரேலிய தொடருக்கு எதிராக மோதிய இந்த வீரர்களுக்கு முறையே கை, காலின் பின்பகுதி மற்றும் கட்டை விரலில் காயம் ஏற்பட்டு அது சரியாகாததையடுத்து இவர்களுக்கு அடுத்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியில் நியூசிலாந்து
இந்தியா -நியூசிலாந்து இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டி தொடரில் 3 முக்கிய பௌலர்கள் இடம்பெறாத நிலையில், முதல் முறையாக பந்துவீச்சாளர் கைல் ஜேமீசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த 2017ல் அயர்லாந்தில் நடைபெற்ற டி20 போட்டிகளில் பங்கேற்ற ஸ்காட் குகலீஜ் மற்றும் ஹமிஷ் பென்னட் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
டாம் லாதம் சேர்ப்பு
இதனிடையே கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வலது கை விரலில் காயம் பட்ட டாம் லாதம் தற்போது இந்தியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்போது விளையாடிவரும் டி20 தொடரில் இடம்பெறாத நிலையில் மீண்டும் ஒருநாள் போட்டி தொடரில் இணைந்துள்ளார்.
பயிற்சியாளர் கேரி ஸ்டெட் உறுதி
மிகவும் வலிமை பொருந்திய இந்திய அணியுடன் மோதி சர்வதேச டி20 தொடரை இழந்துள்ள நிலையில், தற்போது முக்கிய பந்துவீச்சாளர்கள் ஒருநாள் தொடரில் நீக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதிலும் இந்த தொடரில் இந்திய அணியை தைரியமாக எதிர்கொள்வோம் என்று அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். இந்த புதிய குழுவில் பௌலர் டிம் சௌதியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர்கள்
கடந்த ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியாவை வெற்றி கொண்டு, அதன் உலக கோப்பை கனவை முறியடித்த நியூசிலாந்து அணி, அதையடுத்து இங்கிலாந்திடம் தோற்றது. இந்நிலையில் உலக கோப்பையில் இடம்பெற்றிருந்த வலிமையான பேட்ஸ்மேன்கள் தற்போதைய அணியில் உள்ளதால் இந்தியாவை திறமையுடன் எதிர்கொள்ள உள்ளதாகவும் கேரி ஸ்டெட் கூறியுள்ளார்.