மும்பை : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் அரை இறுதிப் போட்டிக்கான பிட்ச், "ஸ்லோ பிட்ச்" என தகவல் வெளியாகி உள்ளது.
அதுவும் இது போன்ற ஸ்லோ பிட்ச் தான் வேண்டும் என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மும்பை மைதான ஊழியர்களிடம் அறிவுறுத்தி பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.
அப்படி அந்த ஸ்லோ பிட்ச்சில் என்ன உள்ளது? இந்திய அணிக்கு சாதகமாக இருக்குமா?

ஒரு பிட்ச்சில் புற்கள் அதிகமாக இல்லாமல் இருப்பது தான் ஸ்லோ பிட்ச் என கூறப்படுகிறது. பிட்ச்சில் லேசான புற்கள் இருக்கும் போது வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம் பேட்டிங் செய்யவும் சாதகமாக இருக்கும். ஆனால், புற்கள் குறைவாக இருக்கும் போது பந்து பிட்ச் ஆனால் எகிறாமல், சற்று தாமதித்து பேட்ஸ்மேனை வந்து அடையும்.
அது ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் என்றாலும் அனுபவம் குறைந்த பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஸ்லோ பந்துகளை கணிப்பது கடினமாக இருக்கும். அதே சமயம், அதிரடி ஆட்டம் ஆடுவது ஸ்லோ பிட்ச்சில் சற்று கடினம் தான். 15 ஓவர் முதல் 40வது ஓவர் வரை நிதான ஆட்டம் ஆடுவதே ஸ்லோ பிட்ச்சில் சிறந்த முடிவாக இருக்கும்.
இந்தியா கொல்கத்தா போட்டியில் இது போன்ற ஸ்லோ பிட்ச்சில் தான் இந்தியா பேட்டிங் செய்து 300 ரன்களுக்கும் அதிகமாக குவித்தது. அப்போது மிடில் ஓவர்களில் இந்தியா மிக நிதானமான ஆட்டத்தை ஆடியது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்கா அணியால் அந்த பிட்ச்சுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள முடியாமல் 83 ரன்களுக்கு ஆல் - ஆவுட் ஆனது.
நியூசிலாந்து அணி மும்பையின் ஸ்லோ பிட்ச்சில் சமாளித்து ஆடும். ஆனால், அதிரடி ஆட்டம் ஆடாது என எதிர்பார்க்கலாம். பிட்ச் எப்படி இருந்தாலும் மும்பையில் மைதானம் கடலுக்கு அருகே இருப்பதால் மாலை நேரத்தில் அதிக காற்று வீசும். அப்போது முதல் 20 ஓவர்கள் பேட்டிங் செய்வது கடினமாக இருக்கும். அப்போது பிட்ச் மற்றும் காற்றின் உதவியால் புதிய பந்து நன்கு ஸ்விங் ஆகும்.
எனவே, சேஸிங் செய்யும் அணி முதல் 10 - 20 ஓவர்களில் கவனமாக விக்கெட் இழக்காமல் நிதான ஆட்டம் ஆட வேண்டும். 20 ஓவர்களை கடந்த பின் அங்கே காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் பந்து வீச்சுக்கு பிட்ச் ஒத்துழைக்காமல் போகும். அது சேஸிங் செய்யும் அணிக்கு சாதகமான விஷயமாகவும் இருக்கும்.