மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 5 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆனால், அஸ்வின் இதற்கு முன் ஒரு முறை கூட நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆன இன்னிங்ஸில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்ததில்லை. இந்த நிலையில் முதல் முறையாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்வில் நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆன நிலையில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இருந்து இருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் அஸ்வின் 5 ஐந்து இன்னிங்ஸ்களில் 6 விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். ஜடேஜா 5 இன்னிங்ஸ்களில் 11 விக்கெட்களும், நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர் மிட்செல் சான்ட்னர் இரண்டு இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்களும், வாஷிங்டன் சுந்தர் மூன்று இன்னிங்ஸ்களில் 15 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளனர்.
இந்த நிலையில் அஸ்வின் மிகவும் பின்தங்கி இருப்பது இந்திய அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது. இதற்கு முன் அஸ்வின் நியூசிலாந்து அணிக்கு எதிராக 22 இன்னிங்ஸ்களில் 72 விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக அஸ்வின் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால், இந்த தொடரில் வெறும் 6 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.
அதிலும் சுந்தர், ஜடேஜா, சான்ட்னர் போன்ற ஸ்பின்னர்கள் அதிகம் விக்கெட் வீழ்த்தி உள்ள இந்த தொடரில் அஸ்வின் வெறும் 6 விக்கெட் மட்டுமே மட்டுமே வீழ்த்தி இருப்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்தது. வில் யங் 71 ரன்களும், டேரில் மிட்செல் 82 ரன்களும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 22 ஓவர்களில் 65 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார். ஆகாஷ் தீப் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.