மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் சுப்மன் கில் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறிய நிலையில் அதில் புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக சுப்மன் கில் - ரோஹித் சர்மா களமிறங்கினர்.
ரோஹித் சர்மா துவக்கம் முதல் அதிரடி ஆட்டம் ஆடி ரன் ரேட்டை உயர்த்தினார். அவர் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார். அப்போது ரோஹித் சர்மா விட்ட அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார் சுப்மன் கில், அவர் ஒரு பக்கம் அதிரடி ஆட்டம் ஆட, விராட் கோலி கவனமாக ரன் சேர்த்தார். ரன் ரேட் 7க்கு குறையாமல் இருந்தது.

அப்போது 21வது ஓவரின் முடிவில் கேப்டன் ரோஹித் சர்மா ஆடுகளத்தில் எதையோ கண்டு பதற்றம் ஆனார். உடனே அஸ்வினை அழைத்து நீண்ட நேரம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார். அடுத்த ஓவரின் இடைவேளையில் சுப்மன் கில், கோலிக்கு அஸ்வின் தண்ணீர் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
அப்போது அவர் சுப்மன் கில்லிடம் பேசினார்.
அடுத்த சில பந்துகள் வீசப்பட்ட பின் கோலி பேட்டிங் செய்த போது சிங்கிள் ரன் ஓடிய சுப்மன் கில் திடீரென காலில் சுளுக்கு ஏற்பட்டதால் கீழே அமர்ந்து விட்டார். இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் அவருக்கு உதவ வந்தார். ஆனாலும், வலி இருந்ததால் சுப்மன் கில் ரிட்டையர்ட் ஆனார். அப்போது அவர் 65 பந்துகளில் 79 ரன்கள் குவித்து இருந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து சில ரசிகர்கள் அஸ்வின், ரோஹித் சர்மாவுடன் பேசுவதையும், அந்த செய்தியை அஸ்வின், சுப்மன் கில்லிடம் கூறுவதையும், அதன் பின் சுப்மன் கில் ரிட்டையர்ட் ஹர்ட் ஆவதையும் குறிப்பிட்டு புகைப்படங்களுடன் வெளியிட்டு வருகின்றனர். நன்றாக ஆடிய பேட்ஸ்மேனை ஏன் ரோஹித் சர்மா ரிட்டையர்ட் ஹர்ட் ஆக சொல்ல வேண்டும்? எனவே, ரோஹித் சர்மா சொல்லி கில் ரிட்டையர்ட் ஆனார் என சொல்வதில் உண்மை இல்லை என்றே பலரும் கூறினர்.
ஆனால், போட்டியில் கடைசி ஓவரில் இந்தியா 4 விக்கெட்களை இழந்த நிலையில், சுப்மன் கில் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். உண்மையில் வருக்கு காலில் ஆடவே முடியாத அளவுக்கு கடும் வலி இருந்து இருந்தால் அவரால் சிங்கிள் ரன்களை எளிதாக ஓடி இருக்க முடியாது. ஆனால், கடைசி ஓவரில் அவர் 3 சிங்கிள் ரன்களை ஓடி எடுத்தார். உண்மையில் என்ன நடந்தது என ரோஹித் சர்மா அல்லது சுப்மன் கில் தான் கூற வேண்டும்.