துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைக் குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்திய அணியின் வெற்றிக்கு இரண்டு வீரர்கள் தான் காரணம் என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
சச்சின் வெளியிட்டுள்ள பதிவில், "ஸ்ரேயாஸ் ஐயர் முக்கியமான இன்னிங்ஸை ஆடினார். வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு இந்திய அணி நியூசிலாந்தை முந்துவதற்கு உறுதுணையாக இருந்தது. இது சிறந்த அணிக்கு கிடைத்த வெற்றி" எனப் பாராட்டி உள்ளார்.

இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியை பேட்டிங்கில் கரை சேர்த்தார். அவர் மட்டும் சரியாக ஆடாமல் போயிருந்தால் இந்திய அணி 150 ரன்களை எட்டி இருக்குமா என்பதே சந்தேகம்தான். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 30 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அப்போது அக்சர் படேலுடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அக்சர் பட்டேல் ஒருபுறம் டெஸ்ட் போட்டி போல விக்கெட்டை தற்காப்பதையே கடமையாகக் கொண்டு பேட்டிங் செய்தார். மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டையும் தற்காத்து ரன்களையும் உயர்த்தும் வேலையைத் திறம்படச் செய்தார். அக்சர் பட்டேல் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில்,
ஸ்ரேயாஸ் ஐயர் உறுதியாக நின்று அரை சதம் அடித்தார். அவர் 98 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார், இதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். அவர் ஆட்டம் இழந்த பின் ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் சேர்த்தார். இதன் பின் இந்திய அணி 249 ரன்கள் எடுத்தது.
ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கில் கைகொடுத்த நிலையில், நியூசிலாந்து அணியை தனது பந்துவீச்சு மூலம் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். நியூசிலாந்து அணி சேஸிங் செய்தபோது, அந்த அணியின் மூத்த வீரரான கேன் வில்லியம்சன் அபாரமாக விளையாடி 81 ரன்கள் அடித்திருந்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களை அடித்தாலும், அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்துவது குறித்த அழுத்தம் இந்திய அணிக்கு பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது. ஹர்திக் பாண்டியா முதல் விக்கெட்டை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி துவக்க வீரர் வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார்.
அதன் பின்னர் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய போதும், நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் நீண்டது என்பதால் இந்திய அணிக்கு அழுத்தம் தொடர்ந்து இருந்தது. அப்போது நியூசிலாந்து அணியின் ஆறு, ஏழு மற்றும் எட்டாவது பேட்ஸ்மேன்களான க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர் ஆகியோரை அடுத்தடுத்து வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார்.
பின் வரிசையை மொத்தமாக அவர் வாரி சுருட்டியதை அடுத்து நியூசிலாந்து அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் மேட் ஹென்றியின் விக்கெட்டையும் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். அவர் பத்து ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வதற்கு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி முக்கிய காரணமாக இருந்தனர். இதைத்தான் சச்சின் டெண்டுல்கர் சுட்டிக்காட்டி பாராட்டுகிறார்.