கவுஹாத்தி: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் மீண்டும் ஒருமுறை சொதப்பியதை அடுத்து, அணியில் அவரது இடம் குறித்து முன்னாள் குஜராத் பேட்ஸ்மேன் பிரியங்க் பஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளார். 154 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, தொடக்க வீசரராக களமிறங்கிய சாம்சன், வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி வீசிய பந்தில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.
முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் சாம்சன் முறையே 10 மற்றும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். அதேசமயம், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன், இரண்டாவது டி20 போட்டியில் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மூன்றாவது டி20 போட்டியிலும் இஷான் கிஷன் 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இதனால், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் சாம்சனுக்குப் பதிலாக கிஷனுக்கு வாய்ப்பளிக்கலாமா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. சாம்சனின் சமீபத்திய சொதப்பல்கள் எவ்வளவு பெரிய விலையை கொடுக்கும் என்பது குறித்து பஞ்சல் தனது 'எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
"சஞ்சுவுக்கு வருத்தமாக இருக்கிறது. அணியில் இடம் பிடிக்க இவ்வளவு கடுமையான போட்டி நிலவும் சூழலில், உலகக் கோப்பைக்கு இவ்வளவு அருகில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் சொதப்ப முடியாது. 2019 உலகக் கோப்பையில் அம்பதி ராயுடு தனது இடத்தைப் பறிகொடுத்ததற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று மோசமான ஆட்டங்களே காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த முறையும் வரலாறு திரும்பும் என்று அஞ்சுகிறேன்," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு, 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக குறைந்த ஸ்கோர்கள் காரணமாக கடைசி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அந்த தொடருக்கு முன்பு பல போட்டிகளில் அவர் இந்தியாவின் நான்காவது வீரராக இருந்தார், அவரது இந்த திடீர் நீக்கம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
சஞ்சு சாம்சன், 2025 டி20 சீசனில் மிக மோசமான ஒரு காலகட்டத்தை சந்தித்துள்ளார். அவர் 15 போட்டிகளில் சராசரியாக 20.18 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், அவரது ஸ்ட்ரைக் ரேட் 126.85 ஆக உள்ளது.சஞ்சு சாம்சனின் போராட்டங்களுக்கு மத்தியிலும், மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை மீண்டும் ஒருமுறை துவம்சம் செய்தது. கவுஹாத்தியில் நடந்த இந்தப் போட்டியில் 154 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, 10 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
சாம்சன் ஆரம்பத்திலேயே வெளியேறினாலும், இந்திய அணி தொடர்ந்து அதிரடியாக விளையாடியது. அபிஷேக் ஷர்மா வெறும் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும் தனது பங்கிற்கு 25 பந்துகளில் தொடர்ந்து இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என முறியடிக்க முடியாத முன்னிலையை பெற்றுள்ளது. அடுத்த டி20 போட்டி ஜனவரி 28 புதன்கிழமை அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.