ராஜ்கோட்: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஜனவரி 14ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இருப்பினும், ஆட்டத்தின் முடிவில் சற்று தடுமாற்றத்தை சந்தித்தது.
முக்கிய வீரர்களின் காயம் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், விராட் கோலியின் அபாரமான ஆட்டம் அணிக்கு பெரும் பலமாக உள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லும் நோக்கில் இந்தியா களமிறங்க உள்ளது. வாஷிங்டன் சுந்தர் பக்கவாட்டு தசை இறுக்கம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து, டெல்லியைச் சேர்ந்த ஆயுஷ் பதோனியை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆல்ரவுண்டர்களை வீரர்களை விரும்புவதால், நிதிஷ் குமார் ரெட்டி ஆடும் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, ரிஷப் பந்த் பந்துவீச்சு பயிற்சி செய்யும் போது காயமடைந்து தொடரிலிருந்து விலக்கப்பட்டார். இதன் காரணமாக துருவ் ஜுரெல் மாற்று வீரராக சேர்க்கப்பட்டார்.
டி20 உலகக் கோப்பை ஒரு மாதத்திற்கும் குறைவாக உள்ள நிலையில், மேலும் காயங்கள் ஏற்படுவதை இந்திய அணி நிர்வாகம் தவிர்க்க விரும்புகிறது. உலகக் கோப்பைக்கான அணி, ஒருநாள் போட்டிகளில் இருந்து மாறுபட்ட பேட்டிங் வரிசையைக் கொண்டிருக்கும் என்றாலும், சில வீரர்கள் இரு வடிவங்களிலும் பொதுவானவர்கள். முக்கியமாக, ஆல்ரவுண்டர் திலக் வர்மா, இடுப்பு தசைப் பிரச்சனை காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அனுபவமிக்க வீரர்களான கோலியும் ரோஹித் ஷர்மாவும் தங்களது சர்வதேச வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் உள்ளனர். முதல் ஆட்டத்தில் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை ஒரு சில ரன்களில் தவறவிட்டாலும், அவரது 91 பந்துகளில் 93 ரன்கள், சிறிய தடுமாற்றத்திற்கு மத்தியிலும் இந்தியாவை வெற்றி பெறச் செய்தன.
கேப்டன் ஷுப்மன் கில் பொறுப்புடன் அரைசதம் அடித்தார், துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் ஆட்டத்தில் ஒரு ரன்னில் அரைசதத்தை நழுவவிட்டார். ரோஹித் ஷர்மாவின் அதிரடி தொடக்கம் நம்பிக்கையளிக்கிறது. எனினும் இந்தியாவின் பந்துவீச்சில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தேவைப்படுகிறது, குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க சிரமப்பட்டனர். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களின் திறமையான ஸ்லோ பால் பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுத்தனர்.
முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தாலும், நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு கடும் போட்டி கொடுத்ததில் நம்பிக்கை பெறலாம். 301 ரன்கள் எடுத்த இந்தியாவை துரத்தும் போது, கைல் ஜேமிசனின் 4 விக்கெட் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆனால், இறுதியில் தவறவிடப்பட்ட கேட்ச்கள் நியூசிலாந்து அணிக்கு தோல்வியை ஏற்படுத்தின.
டெவோன் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் இடையேயான 117 ரன்கள் தொடக்க கூட்டணி வலுவான அடித்தளத்தை அமைத்தது. எனினும், மத்திய வரிசை சொதப்பியது. டேரில் மிட்செல்லின் அதிரடி 84 ரன்கள் நியூசிலாந்துக்கு சவாலான ஸ்கோரை அளித்தது. இளம் லெக்-ஸ்பின்னர் ஆதித்யா அஷோக் சிறப்பாக செயல்படுவார் என நியூசிலாந்து நம்புகிறது.
இந்தியா: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி/ஆயுஷ் பதோனி, ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
நியூசிலாந்து: டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோல்ஸ், வில் யங், டேரில் மிட்செல், மிட்செல் ஹே (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), கிறிஸ்டியன் கிளார்க், கைல் ஜேமிசன், சாக் ஃபௌல்க்ஸ், ஆதித்யா அஷோக்.