மும்பை : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் அரை இறுதிப் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதற்கு காரணம், போட்டி நடக்க உள்ள மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச்தான். பொதுவாக மும்பை பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்றாலும், அரை இறுதிக்கான பிட்ச் ஸ்லோ பிட்ச்சாக அமைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற ஸ்லோ பிட்ச்களில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டி இதே மும்பை மைதானத்தில் தான் நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட்களை வீழ்த்தினார்கள்.
அதே போல, சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் எப்போதும் ஸ்லோ பிட்ச் என்றே அறியப்படுகிறது. அங்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா ஆடிய போட்டியின் போது அஸ்வின், ஜடேஜா போன்றோருக்கு சாதகமான பிட்ச் இருந்தது. அந்த வகையில், மும்பையில் ஸ்லோ பிட்ச் என்பதால் கூடுதல் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
இந்திய அணியில் தற்போது மாற்று வீரராக இருக்கும் அஸ்வின் மட்டுமே கூடுதல் சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார். தற்போது அணியில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் இருக்கும் நிலையில், அவர்களுடன் இணைந்து அஸ்வின் பந்துவீச வாய்ப்பு உள்ளது.
ஆனால், அஸ்வினை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் சூர்யகுமார் யாதவை நீக்க வேண்டும். வேகப் பந்துவீச்சாளர்களில் யாரையும் நீக்க முடியாது. சூர்யகுமாரை நீக்கினால் இந்திய அணி ஐந்து முழு நேர பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கும். கூடுதலாக ஜடேஜா, அஸ்வின் பேட்டிங் செய்வார்கள். அது பெரிய ரிஸ்க் தான்.
எனவே, அஸ்வினை அணியில் சேர்ப்பது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா தான் இறுதி முடிவை எடுப்பார். தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யாமல் கடந்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி தேடித் தந்த அதே அணியுடன் தான் இந்தியா பயணிக்கும்.