மும்பை : நடிகர் ரஜினிகாந்த் இந்தியா - நியூசிலாந்து போட்டியை காண நேரில் சென்றார்.
2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் நிலையில், அதை பிசிசிஐ ஏற்று நடத்துகிறது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்தியாவின் முன்னணி நடிகர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுத்து இருந்தார்.

அந்த வகையில் இந்தியா முழுவதும் பெரிய பிரபலமான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று கோல்டன் டிக்கெட் கொடுத்து உலகக்கோப்பை போட்டிகளை காண நேரில் வருமாறு அழைத்து இருந்தார் ஜெய் ஷா.
சென்னையில் நடந்த போட்டியை நேரில் கண்ட ரஜினிகாந்த், தற்போது மும்பையில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து அரை இறுதிப் போட்டியை காண நேரில் சென்றார். போட்டிக்கு முந்தைய தினமே அவர் மும்பை சென்றார்.
கோல்டன் டிக்கெட் வைத்து இருப்பவர்கள் முக்கிய நபர்களாக கருதப்பட்டு அவர்களுக்கு மைதானத்தில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என கூறப்படுகிறது. அவர்களுக்கு பரிசோதனை உள்ளிட்ட எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் நேராக மைதானம் உள்ளே சென்று கேலரியில் அமர்ந்து உலகக்கோப்பை போட்டிகளை காணலாம்.

ஜெய் ஷா அன்று விடுத்த அழைப்பை நிறைவேற்றும் வகையில் ரஜினி நேரில் சென்றார். அவர் மட்டுமின்றி பல பிரபலங்கள் போட்டியை காண நேரில் சென்றனர். இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம், பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், ரன்பீர் கபூர், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் போட்டியை காண நேரில் வந்திருந்தனர்.