மும்பை : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் அரை இறுதியில் எதிர்பார்க்காத வகையில் போட்டியை மாற்றக் கூடிய ஆற்றல் கொண்ட ஒரு வீரர் இருக்கிறார் என்றால் அது சூர்யகுமார் யாதவ் தான்.
அவர் அதிரடி பேட்ஸ்மேன் என்பதோடு, அரை இறுதி போட்டி நடைபெற இருக்கும் மைதானம் அவருக்கு அதிகம் பழக்கமானது என்பதால் அவர் எளிதாக பெரிய அளவில் அதிரடியாக ஆடி ரன் குவிக்க முடியும்.

கடந்த 2023 ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் வான்கடே மைதானத்தில் மட்டும் ஏழு டி20 போட்டிகளில் ஆடி 367 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரது சராசரி 73.40. ஸ்ட்ரைக் ரேட் 201.64. இந்த புள்ளி விவரம் எல்லாமே தாறுமாறாக இருக்கும் நிலையில், அவர் இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் கடைசி 10 ஓவர்கள் மட்டும் ஆடினால் கூட நியூசிலாந்து அணியை சிதறவிட்டு விடுவார்.
2023 உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் இதுவரை நான்கு முறை பேட்டிங் செய்ய வாய்ப்பு பெற்று இருக்கிறார். அதில் ஒரு முறை மட்டுமே அணிக்கு உதவும் வகையில் 49 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தவிர மற்ற இந்திய வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் நிதான ஆட்டம் ஆடி 49 ரன்கள் சேர்த்தார் இந்தியா அப்போது வெறும் 229 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது.
அந்தப் போட்டியைத் தவிர சூர்யகுமார் யாதவ் இதுவரை தன் பெயரை நிலைநாட்டும் வகையில் எந்தப் போட்டியிலும் ஆடவில்லை. எனவே, அவர் தனக்கு பிடித்த மும்பை வான்கடேவில் வாய்ப்பு கிடைத்தால் பெரிய அளவில் அதிரடி ஆட்டம் ஆடி சிக்ஸ், ஃபோர்களை சிதறவிடுவார் என எதிர்பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸிலும் முதல் 10 ஓவர்கள் தான் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அப்போது தான் விக்கெட் விழும். எனவே, இந்தியா முதல் 30 - 40 ஓவர்கள் நிதானமான ஆட்டம் ஆடிவிட்டு கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டம் ஆடவே முயலும். அந்த நேரத்தில் சூர்யகுமார் யாதவ் கை கொடுப்பார்.