நாக்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரிங்கு சிங், தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அணியின் ஸ்கோரை 238 ரன்களாக உயர்த்தினார். வெறும் 20 பந்துகளைச் சந்தித்த ரிங்கு சிங், 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்நிலையில், ரிங்கு சிங்கின் திறமையை இந்திய அணி நிர்வாகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய சைமன் டல், ரிங்கு சிங் இந்திய அணியில் நடத்தப்படும் விதம் குறித்துக் கேள்வி எழுப்பினார். 2023ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமான ரிங்கு சிங், இதுவரை வெறும் 36 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடந்த 2024 டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
தற்போது 2026 உலகக்கோப்பைத் திட்டத்தில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்துப் பேசிய சைமன் டல், "ரிங்கு சிங் உலகின் மிகச்சிறந்த ஃபினிஷர்களில் ஒருவர். ஐபிஎல் தொடரில் கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் தனது திறமையை நிரூபித்து வெளிச்சத்திற்கு வந்துவிட்டார். ஆனால், அவருக்கு இந்திய அணி நிர்வாகம் போதிய வாய்ப்புகளை வழங்கவில்லை என்றே நான் கருதுகிறேன். இந்நேரம் அவர் இந்தியாவுக்காகக் குறைந்தது 100 டி20 போட்டிகளிலாவது விளையாடியிருக்க வேண்டும். ஆனால் மிகக் குறைவான போட்டிகளிலேயே அவர் ஆடியுள்ளார்" என்று குறிப்பிட்டார்.
ரிங்கு சிங்கின் பேட்டிங் திறமை குறித்துப் புகழ்ந்து பேசிய அவர், "கடைசி கட்டத்தில் ஆட்டத்தை முடித்துக் கொடுப்பதில் ரிங்கு சிங் வல்லவர். அந்த பணியில் அவருக்கு முழுமையான ஆதரவை அணி நிர்வாகம் அளிக்க வேண்டும். அவர் பார்ப்பதற்கு உயரமாக இல்லாவிட்டாலும், அவரிடம் அபாரமான உடல் வலிமை உள்ளது. கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் யார்க்கர் வீசினாலும், அதைச் சிக்ஸருக்கு பறக்கவிடும் திறமை அவரிடம் இருக்கிறது. அவருக்குப் பந்துவீசுவது எந்தவொரு பந்துவீச்சாளருக்கும் கடினமான ஒன்று" என்று தெரிவித்தார்.
நாக்பூர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் குவித்துச் சிறப்பான அடித்தளம் அமைத்தார். சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 25 ரன்களும் எடுத்தனர். இவர்களோடு இணைந்து ரிங்கு சிங் கடைசி நேரத்தில் காட்டிய வாணவேடிக்கை இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 190 ரன்களுக்குச் சுருண்டது.
இந்திய அணியில் உள்ள மிகச்சிறந்த மேட்ச் வின்னரான ரிங்கு சிங்கை, இனிவரும் காலங்களிலாவது தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதே சைமன் டல் போன்ற கிரிக்கெட் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.