மும்பை: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்திற்கான பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சை தயார் செய்ய முயன்றது.
முதல் போட்டியில் மழையின் காரணமாக பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. அதை எதிர்பாராததால் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதே போல இரண்டாவது போட்டியில் பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் தாங்கள் விரித்த வலையில் தாங்களே சிக்கிக் கொண்டு மோசமாக அவுட் ஆனார்கள்.

அதனால், இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்து டெஸ்ட் தொடரை 2 - 0 என இழந்து இருக்கிறது. அடுத்து மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருக்கிறது இந்திய அணி. இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தின் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைய உள்ளதாகவும், முதல் நாள் அன்று பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் எனவும், இரண்டாவது நாள் முதல் படிப்படியாக சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது.
எனவே, இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். முதலில் பேட்டிங் செய்யும் அணி 400 ரன்களுக்கும் அதிகமாக சேர்ப்பதன் மூலம் இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தலாம். மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை இந்திய அணி 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 12 வெற்றிகள், 7 தோல்விகள் மற்றும் 7 டிரா செய்துள்ளது.
நியூசிலாந்து அணி மும்பை வான்கடே மைதானத்தில் இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் மும்பை வான்கடே மைதானம் இரண்டு அணிகளுக்கும் சரி சமமான வாய்ப்பாக இருக்கும். முக்கியமாக இந்திய அணி இந்த போட்டியில் டாஸ் வெல்ல வேண்டும். அது மட்டும் நடந்து விட்டால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.