மும்பை: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக முகமது சிராஜ் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.
பும்ராவுக்கு உடல்நிலை சரியில்லை என கேப்டன் ரோஹித் சர்மா கூறினார். அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கும் இந்த வெற்றி முக்கியமானதாக இருக்கும்.
இந்த நிலையில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. மும்பை வான்கடே மைதான பிட்ச் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டாவது நாள் முதல் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இது அந்த அணிக்கு சாதகமாக அமையும்.
நியூசிலாந்து அணியின் மிட்செல் சான்ட்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷ் சோதி அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். சான்ட்னர் கடந்த போட்டியில் 13 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். எனினும், அவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் நீக்கப்பட்டார்.
நியூசிலாந்து பிளேயிங் 11: டாம் லாதம் (கேப்டன்), டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளன்டெல் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி, மாட் ஹென்றி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓரூர்க்
இந்தியா பிளேயிங் 11: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்