மும்பை : இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி பல வரலாற்று சாதனைகளை படைத்து இருக்கிறார்.
மேலும், அதிக ஒருநாள் போட்டி ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தி மூன்றாவது இடம் பிடித்து மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தார் விராட் கோலி. மேலும், ஒரே உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சினை முந்தி முதல் இடம் பிடித்தார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி, சுப்மன் கில்லுக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார். அதே சமயம், தானும் ரன் குவிக்கத் தவறவில்லை.

சிறப்பாக ஆடிய விராட் கோலி இந்தப் போட்டியில் 28 ரன்களை கடந்த போது, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தினார். ரிக்கி பாண்டிங் 13704 ரன்கள் அடித்த நிலையில், கோலி அவரை கடந்து அந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.
அடுத்து அரைசதம் அடித்த கோலி ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கரின் 2003 உலகக்கோப்பை சாதனையை முறியடித்தார். சச்சின் அப்போது ஏழு முறை 50க்கும் மேல் ரன் குவித்திருந்த நிலையில், விராட் கோலி எட்டாவது முறையாக 2023 உலகக்கோப்பை தொடரில் 50க்கும் மேற்பட்ட ரன் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
அடுத்து ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 2003 உலகக்கோப்பையில் 673 ரன்கள் அடித்த நிலையில், அதையும் முறியடித்து முதல் இடத்தை பிடித்தார் கோலி. அதைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 113 பந்துகளில் 117 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் 50வது சதம் அடித்த விராட் கோலி உலகிலேயே முதல் வீரராக இந்த மைல்கல் சாதனையை எட்டி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 49 சதம் மட்டுமே அடித்த நிலையில், விராட் கோலி அதை முறியடித்து 50 வது சதத்தை அடித்தார்.