டாஸ் வெற்றி யாருக்கு?
இரண்டாவது டி20யில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. டாஸில் தோற்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் கூறுகையில் இந்தியா முதலில் பந்து வீசவே விரும்புகிறது என குறிப்பிட்டார். முதல் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து, வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அணியில் மாற்றம் இல்லை
முதல் போட்டியில் இந்தியா படு தோல்வி அடைந்த நிலையில் அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாம் போட்டியில் இந்தியா முதல் போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்க முடிவு செய்துள்ளது.
இந்திய அணி விவரம்
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பண்ட், விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, புவனேஸ்வர் குமார், சாஹல், கலீல் அஹ்மது.
நியூசிலாந்து அணி விவரம்
நியூசிலாந்து அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணி - செய்ஃபர்ட், மன்றோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), மிட்செல், டெய்லர், கிராண்ட்ஹோம், சான்ட்னர். குக்லேய்ஜன், டிம் சௌதி, இஷ் சோதி, பெர்குசன்.
நியூசிலாந்து பேட்டிங்
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் செய்ஃபர்ட்-ஐ 12 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த போது புவனேஸ்வர் குமார் வீழ்த்தினார். இவர் முதல் போட்டியில் அதிரடியாக ஆடி 84 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணி அடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில், க்ருனால் பண்டியா தான் வீசிய முதல் ஓவரிலேயே மன்றோ 12, மிட்செல் 2, என இரண்டு விக்கெட்களை எடுத்தார். அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சனையும் 20 ரன்கள் அடித்த நிலையில் அனுப்பி வைத்தார். இப்படி விக்கெட்கள் விழுந்தாலும், அடுத்து வந்த கிராண்ட்ஹோம் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து ஹர்திக் பண்டியா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராஸ் டெய்லர் 42, சான்ட்னர் 7, சௌதி 3 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்து இருந்தது.
15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 121 ரன்கள் எடுத்து 4 விக்கெட் இழந்து ஆடி வருகிறது. கிராண்ட்ஹோம் 25 பந்துகளில் 47 ரன்கள் அடித்து ஆடி வருகிறார். ராஸ் டெய்லர் 24 ரன்கள் அடித்து ஆடி வருகிறார்.
6 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 43 ரன்கள் எடுத்து 3 விக்கெட் இழந்து ஆடி வருகிறது.
இந்தியா பந்துவீச்சு எப்படி?
முதல் போட்டியுடன் ஒப்பிடுகையில், இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. எனினும், கிராண்ட்ஹோம், ராஸ் டெய்லர் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறினர். அதன் காரணமாகவே 50 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து இருந்த நியூசிலாந்து, பின்னர் 158 ரன்கள் குவித்தது. க்ருனால் பண்டியா 3, கலீல் 2, புவனேஸ்வர் குமார் 1, ஹர்திக் பண்டியா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
அடுத்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு அட்டகாசமான துவக்கம் அளித்தனர் ரோஹித் - தவான். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் 29 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அதிரடி காட்டினார். தவான் பொறுமையாக ஆடி 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து நடையைக் கட்டினார்.
ரிஷப் - தோனி அபாரம்
அடுத்து விஜய் ஷங்கர் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார். இறுதியில் ரிஷப் பண்ட், தோனி கடைசி வரை நின்று அணியை வெற்றி பெறச் செய்தனர். ரிஷப் பண்ட் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து இருந்தார். தோனி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.
தொடர் வெற்றி யாருக்கு?
இந்த வெற்றி மூலம் இந்திய அணி தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் அந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.