
முதல் இன்னிங்ஸ் ஆட்டம்
இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 80 ரன்களை சேர்த்தனர். ஆனால் சுப்மன் கில் 44 ரன்களுக்கு வெளியேறிய பிறகு அடுத்தடுத்து மேலும் 2 விக்கெட்டுகள் சரிந்தன. நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர் அஜாஸ் பட்டேல் இந்திய அணியின் டாப் ஆர்டரை சரித்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள்
அஜாஸின் சுழலில் சிக்கி புஜாரா, கோலி ஆகியோர் டக் அவுட்டாக, ஸ்ரேயாஸ் ஐயர் (18), சாஹா ( 27) என அடுத்தடுத்து நடையை கட்டினர். ஆனால் மறுமுனையில் தூண் போன்று நின்றிருந்த மயங்க் அகர்வால் ஒற்றையாளாக இந்திய அணியை மீட்டார். மொத்தமாக அவர் 17 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 150 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களை எடுத்து வலுவாக உள்ளது.

அஜாஸ் பட்டேல் அசத்தல்
இந்த போட்டியில் மயங்க் அகர்வாலை விட நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் தான் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். இதற்கு காரணம் அவர் செய்துள்ள பிரமாண்ட சாதனை தான். நியூசிலாந்து அணியின் வழக்கமான பவுலர்களால் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. மொத்தமுள்ள 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்துவீச்சாளரான அஜாஸ் பட்டேல் தான் எடுத்துக் கொடுத்தார். அவரின் சுழலில் மட்டுமே இந்திய வீரர்கள் வெளியேறினர்.
Recommended Video

3வது வீரர்
இதன் மூலம் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய 3வது வீரர் என்ற பெருமையை அஜாஸ் பட்டேல் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் முதல் முறையாக கடந்த 1956ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஜிம் லாகர் 10 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். இதே போல கடந்த 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் அனில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதன் பின்னர் 22 ஆண்டுகள் கழித்து தற்போது அஜாஸ் பட்டேல் எடுத்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications