ஏமாற்றம் அளித்த பேட்டிங்
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றி சாதனை புரிந்தது. எனினும், நான்காவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ரன்கள் மட்டுமே அடித்து கடும் ஏமாற்றம் அளித்தது.
கோலி, தோனி இல்லை
முதல் இரண்டு போட்டிகளில் தோனி, கோலி அணியில் இடம் பெற்றனர். மூன்றாவது போட்டியில் தோனி காயம் காரணமாக ஆடவில்லை. அந்த போட்டியில் கோலி இடம் பெற்றார். நான்காவது போட்டியில் தோனி காயம் காரணமாகவும், கோலி ஓய்வில் இருப்பதாலும் பங்கேற்கவில்லை. இதனால் தான் இந்தியா தோல்வி அடைந்தது என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கோலி இல்லாதது இழப்பா?
போட்டிக்கு பின் கோலி இல்லாதது தான் பேட்டிங்கில் பாதிப்பை ஏற்படுத்தியதா? என கேட்கப்பட்டது. அது குறித்து பேசிய புவனேஸ்வர் குமார், "நாங்கள் கோலியை மட்டுமே சார்ந்து இருக்க விரும்பவில்லை" என தெரிவித்தார்.
இது ஒரு பாடம்
மேலும், இந்த போட்டியில் மிடில் ஆர்டர் சரியாக ஆடவில்லை என கூறப்படுவதை பற்றி பேசிய புவனேஸ்வர் குமார், "மிடில் ஆர்டர் மட்டுமல்ல, இந்த போட்டி அனைவருக்குமே ஒரு பாடம்" என கூறினார்.
பவுல்ட்டின் ஸ்விங் பந்துவீச்சு
புவனேஸ்வர் குமார் தன் பேச்சில் அணியின் தோல்வியை சமாளித்து பேசினார். இந்த ஒரு போட்டியின் தோல்வி என்பது பெரிய விஷயமில்லை தான். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து வீரர் ட்ரென்ட் பவுல்ட்டின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமலேயே வரிசையாக ஆட்டமிழந்தனர். முதல் மூன்று போட்டிகளில் பவுல்ட்-இன் ஸ்விங்கிற்கு ஏற்ற ஆடுகளம் அமையவில்லை. ஆனால், நான்காவது போட்டியில் அதற்கு ஏற்ற களத்தில் இந்திய பேட்டிங் சரிந்து விட்டது.
2019 உலகக்கோப்பை ஆடுகளங்கள்
நியூசிலாந்து ஆடுகளங்கள் போலவே இங்கிலாந்து ஆடுகளங்களும் ஸ்விங் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும். 2019 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ள நிலையில், இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறி வருவது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.
கோலி இல்லை என்றால்..
கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் கோலி மட்டுமே இங்கிலாந்து மண்ணில் ஸ்விங் பந்துவீச்சை சமாளித்து ரன் குவித்தார். இந்திய அணி, புவனேஸ்வர் குமார் சொல்வதை போல கோலியை சார்ந்து இருக்க விரும்பவில்லை என்றால், ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இல்லையென்றால், ஸ்விங் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளங்களில் இந்தியாவின் ஸ்கோர் 100, 150 என்று தான் இருக்கும்.