தரம்சாலா : நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா பீல்டிங்கில் மிக மோசமாக சொதப்பியது.
குறிப்பாக மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நியூசிலாந்து அணி வீரர்கள் ரச்சின் ரவீந்திரா - டேரில் மிட்செல் 100 ரன்களை தாண்டி கூட்டணி அமைத்து ஆடினர்.
அப்போது இந்திய அணி மூன்று கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டு பெரும் அதிர்ச்சி அளித்தது. அதில் மிக மிக எளிய வாய்ப்பை தவறவிட்டார் பும்ரா.

இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவை மட்டுமே குறி வைத்து தாக்கியது நியூசிலாந்து அணி. ஓவருக்கு 7 ரன்களுக்கும் மேல் ரன்களை வாரி இறைத்து சோகத்தில் இருந்த குல்தீப்புக்கு மேலும் துன்பத்தை கொடுத்தார் பும்ரா. டேரில் மிட்செல் அடித்த பந்தை பவுண்டரி எல்லை அருகே இருந்த பும்ரா ஓடி வந்து கேட்ச் பிடிக்க முயன்றார். பந்து அவர் கைகளில் சிக்கி பின் வெளியே வந்தது. பதற்றத்தில் பும்ரா பந்தை தட்டி விட அது ஃபோர் ஆனது.
எளிதான கேட்ச்சை கோட்டை விட்ட பும்ரா செயலைப் பார்த்து விராட் கோலி அதிர்ச்சியில் உறைந்து நின்றார். முன்னதாக சிறந்த பீல்டர் ஜடேஜா ஒரு கேட்சை நழுவ விட்ட நிலையில், பும்ராவுமா இப்படி என கேப்டன் ரோஹித் சர்மா ஏமாற்றம் தாங்காமல், அருகில் இருந்த விராட் கோலியிடம் புலம்பினார்.
மறுபுறம், ஏற்கனவே தன் பந்துவீச்சு எடுபடவில்லை என்ற அழுத்தத்தில் இருத்த குல்தீப் யாதவ், கேட்ச்சும் நழுவி, கூடுதலாக ஒரு பவுண்டரியும் போனதால் உடைந்து போய் காணப்பட்டார். அந்த சம்பவத்தால் அவர் கண்கள் சுருங்கிப் போனது.
பின்பு டேரில் மிட்செல் சதம் அடித்த பின் 50வது ஓவரில் தான் ஆட்டமிழந்தார். பும்ரா அந்த எளிதான கேட்சை பிடித்து இருந்தால் நியூசிலாந்து அணி 250ரன்களையே தாண்டி இருக்காது. எனினும், இந்தப் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால், பும்ரா கோட்டை விட்ட அந்த எளிய கேட்ச் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.