
சவால் இலக்கு
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தரப்பில் தொடக்க வீரர் மார்டின் கப்தில் 42 பந்துகளில் 70 ரன்களும், சாப்மேன் 50 பந்துகளில் 63 ரன்களும் விளாசினர். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை.

விறுவிறுப்பான போட்டி
சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது. கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் 48 ரன்களும், கே.எல்.ராகுல் 15 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதன் பின்னர் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 40 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. இதன் மூலம் 1 - 0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
வைரல் வீடியோ
இந்நிலையில் இந்த போட்டிக்கு இடையே தீபக் சஹார் - மார்டின் கப்தில் இடையே நடைபெற்ற சண்டை இணையத்தில் வைரலாகி வருகிறது. நியூசி, பேட்டிங்கின் போது, 18வது ஓவர தீபக் சஹார் வீச மார்டின் கப்தில் எதிர்கொண்டார். அந்த ஓவரின் முதல் பந்தை வைட் திசையில் வீச, கப்தில் நோ லுக் சிக்ஸராக மாற்றி அசத்தினார். அப்போது சாஹரையும் " தம்பி ஓரமா போ" என்பது போல நக்கலாக முறைத்து பார்த்தார்.

சஹார் பதிலடி
இதனால் கடுப்பான தீபக் சஹார், அடுத்த பந்திலேயே பதிலடி கொடுத்தார். 2வது பந்தை சிக்ஸர் அடிக்க லாவகமாக இருப்பது போல் போட, அதனையும் கப்தில் சிக்ஸருக்கு தூக்கி அடித்தார். ஆனால் அந்தை பந்து மிகக்குறைவான வேகத்தில் போடப்பட்டதால், பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனது. இதன் பின்னர் கப்திலை பார்த்த சஹார், "நீ முதல்ல போ தம்பி" என்பது போல முறைத்து வழியனுப்பி வைத்தார். இந்த சம்பவம் மைதானத்தில் சுவாரஸ்யமாக அமைந்தது. தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications