ஒரு வீரர் நன்றாக ஆடினால்.. இரட்டை அர்த்தத்தில் பேசிய முகமது ஷமி.. ரோஹித்துக்கு சொல்லப்பட்ட மெசேஜ்
தரம்சாலா : நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமே முகமது ஷமி தான்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் முகமது ஷமி 5 விக்கெட்கள் சாய்த்தார். அதனாலேயே இந்திய அணி நியூசிலாந்து அணியை 273 ரன்களுக்குள் சுருக்கியது.
கடைசி ஓவர்களில் முகமது ஷமி சிறப்பாக வீசி விக்கெட்களை வீழ்த்தாமல் போயிருந்தால் இந்தியாவுக்கு 300க்கும் அதிகமான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும். ஆனால், இந்தியா 274 ரன்கள் இலக்கை சேஸ் செய்தது. சரியாக 48வது ஓவரில் தான் இந்தியா இலக்கை எட்டியது.
முகமது ஷமி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் நான்கு போட்டிகளில் வாய்ப்பை பெறவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டிக்கு முன் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததால் வாய்ப்பை பெற்றார். அதிலும் 5 விக்கெட் வீழ்த்தி தன் திறமையை காட்டி இருக்கிறார். இப்படி ஒரு அனுபவம் வாய்ந்த திறமைசாலிக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படவில்லை? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், போட்டியின் முடிவில் 5 விக்கெட்கள் வீழ்த்திய முகமது ஷமிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது, அப்போது அணியில் இடம் அளிக்கப்படாமல் இருப்பது பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், "அணி நன்றாக ஆடும் போது, வாய்ப்பு இல்லாமல் இருப்பது கடினமான இல்லை. அனைவரும் சக வீரர்கள் தான். அவர்கள் நன்றாக ஆடும் போது அவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அணியின் நலனுக்காக என்றால் எனக்கு அதில் பிரச்சனை இல்லை." என்றார்.
இதில் என்ன இரட்டை அர்த்தம் என்றால், ஒரு வீரர் நன்றாக ஆடினால் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என சொல்லி இருப்பது அவருக்கே பொருந்தும். அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து அவருக்கு கிடைத்த அடுத்த வாய்ப்பில் மீண்டும் 5 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதைவிட நன்றாக ஆடும் வீரர் இந்திய அணியில் வேறு யாரும் இல்லை என்பதே உண்மை. அப்படி என்றால் அவருக்கு தான் மற்ற வீரர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
அணியின் நலனுக்காக வெளியில் அமர வைக்கப்படுவதில் பிரச்சனை இல்லை என கூறி இருக்கிறார். அப்படி என்றால் சரியாக பந்து வீசாத ஷர்துல் தாக்குரை அணியின் நலன் கருதி வெளியே அமரவைத்து விட்டு, அணியின் நலனுக்காக முகமது ஷமியை அனைத்து போட்டிகளிலும் ஆட வைப்பதே சரியான முடிவாக இருக்கும்.
ஷமி இந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றாலும் அவர் பேசிய பேச்சில் இருக்கும் நியாயத்தை பின்பற்றினால் ஷமிக்கு தான் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஷமி தெரிந்தோ, தெரியாமலோ சொன்ன இந்த மறைமுக செய்தி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு புரிந்திருக்குமா?


Click it and Unblock the Notifications