
சிறப்பான பவுலிங்
இந்தப்போட்டியில் பேட்டிங் என்னதான் சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சு தனி கவனம் பெற்றது. விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த புவனேஷ்வர் குமார் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மற்றொருபுறம் இளம் வீரர் முகமது சிராஜும் ஒரு விக்கெட் எடுத்து அசத்தினார். ஆனால் அவரது ஓவரில் ரன்கள் அதிகமாகக் கசிந்தது. அவர் 4 ஓவர்களில் 39 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றியிருந்தார்.

சிராஜின் காயம்
இதே போல சிராஜுக்கு நேற்றைய போட்டியில் காயமும் ஏற்பட்டது. கடைசி ஓவரை அவர் வீசும் போது, கையில் அடிபட்டு ரத்தம் வர தொடங்கியது. மைதானத்திலேயே அவசர அவசரமாக தையல் போடும் அளவிற்கு காயம் அதிகமாகி உள்ளது. இதனால் அடுத்த 2 போட்டிகளிலும் அவர் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

தினேஷ் கார்த்திக் கருத்து
இந்நிலையில் சிராஜின் இடம் குறித்து பேசியுள்ள தமிழக கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேலுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனக்கூறியுள்ளார். அவர், சிராஜ் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய இருவருமே சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு யாரை வேண்டுமென்றாலும் அணியில் சேர்க்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை பொருத்தவரை ஹர்ஷல் படேல் தான் டி20 போட்டிகளில் சிறந்தவர் என்று தோன்றுகிறது.

சரியான நேரம்
முகமது சிராஜ் வேகமாக பந்துவீச கூடியவர். அதே வேளையில் ஹர்ஷல் படேல் ஸ்லோ பால்களை அதிகம் வீசும் திறமைப்பெற்றவர். அதுவும் சரியான நேரத்தில் சரியான ஸ்லோ பால்களை வீசும் திறன் உடையவர். இதுபோன்ற பந்துவீச்சுக்கு டி20 போட்டிகளுக்கு மிகவும் அவசியம். ஹர்ஷல் படேல் போல ஆவேஷ் கானும் சிறந்த பவுலர் தான். இருப்பினும் எனக்கு தெரிந்தவரை ஹர்ஷல் படேலை பயன்படுத்திப் பார்க்கலாம். முதலாவது போட்டியில் சிராஜுக்கு சரியான நேரத்தில் ஓவர்கள் வழங்கப்படவில்லை. பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டி வரும் போது சிராஜை அழைத்தால் நிச்சயம் சிறப்பாக பந்து வீச முடியும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications